சட்டம் – ஒழுங்கை சீர்குலைக்க நினைக்கும் சுப்பிரமணியன் சாமியை தமிழகத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும் : கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் அறிக்கை!

untitled‘’மத்தியில் பாரதீய ஜனதா தலைமையிலான ஆட்சி அமைந்தது முதலே தமிழின துரோகி சுப்பிரமணியன் சாமி சிங்கள பேரினவாத அரசுடன் கை குலுக்குவதும் அடிக்கடி இலங்கைக்கு சென்று அந்நாட்டு அதிபருடன் ஒட்டி உறவாடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இவரது ஒவ்வொரு நடவடிக்கையும் தமிழக நலன்களுக்கு எதிராகவே உள்ளன.

இலங்கையில் அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து கூறி வருகிறார். தமிழக மீனவர்களின் படகுகளை நான்தான் பறிமுதல் செய்யச் சொன்னேன் என்று கூறினார்.

இப்போது இலங்கையில் தமிழர்ளை கொன்று குவித்தற்காக ராஜபக்ஷேவுக்கு இந்தியா பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது உச்சக்கட்டம் இதனை பொறுத்துக் கொள்ளமுடியாது.

மத்திய அரசு மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. அது பலனளித்து விடக் கூடாது என்பதற்காக சுப்பிரமணியன் சாமி செயல்பட்டு வருகிறார்.

சுப்பிரமணியன் சாமி தமிழர்களுக்கு எதிராக கருத்து சொல்வதன் மூலம் தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சியை வளர்க்க வேண்டும் என்ற தலைமையின் முயற்சிக்கு முட்டுக்கட்டையே ஏற்படுகிறது.

தமிழர்களுக்கு எதிராகவும், தமிழக நலன்களுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் சுப்பிரமணியன் சாமியை தமிழகத்துக்குள் நுழைய தடை விதிக்க வேண்டும். அரசு இதனை செய்யா விட்டால் மக்களே இதனை செய்வார்கள் என்று எச்சரிக்கிறோம்’’என்று தனது அறிக்கையில் ஈ.ஆர். ஈஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

-சி.மகேந்திரன்.