சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் நலன் சார்ந்து அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை!- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றச்சாட்டு.

2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் நலன் சார்ந்து திமுக கீழ்க்கண்ட 5 வாக்குறுதிகளை அளித்தது.

  1. தற்காலிக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் ( வாக்குறுதி எண்:153)
  2. 70 வயதைக் கடந்த ஓய்வூதியர்களுக்கு 10% ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் (வாக்குறுதி எண்:308)
  3. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் ( வாக்குறுதி எண்:309)
  4. சமவேலைக்கு சம ஊதியம் என்ற தத்துவத்தின்படி, ஆசிரியர்களுக்கு இடையிலான ஊதிய முரண்பாடுகள் களையப்படும் (வாக்குறுதி எண்: 311)
  5. அங்கன்வாடி பணியாளர்களும், சத்துணவு பணியாளர்களும் அரசு ஊழியர்களாக்கப்படுவார்கள் ( வாக்குறுதி எண்: 313)

இந்த 5 வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஆண்டுக்கு ஒருமுறை வீதம் இதுவரை மூன்று முறை சென்னையில் பல வடிவங்களில் போராட்டம் நடத்தியுள்ளனர். ஒவ்வொரு முறையும் அவர்களுடன் பேச்சு நடத்திய தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் அடுத்த சில வாரங்களில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தும் கூட இதுவரை ஒரு கோரிக்கை கூட நிறைவேற்றப்படவில்லை.

அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாததற்கு அரசின் நிதி நெருக்கடி தான் காரணம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது ஏமாற்று வேலை.

தமிழ்நாட்டில் மட்டுமே நிதி நெருக்கடி நிலவவில்லை. அனைத்து மாநிலங்களும் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. ஆனாலும், கர்நாடகம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கார், பஞ்சாப், இமாலயப்பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் சாத்தியமாகும் போது, தமிழகத்தில் மட்டும் அதற்கு சாத்தியம் இல்லை என்று கூற முடியாது. மாறாக, அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு தமிழக அரசுக்கு ஆர்வம் இல்லை என்றே கூற வேண்டும்.

வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களுக்கு சிறந்த தண்டனை தோல்வி தான். அதை திமுகவுக்கும் தர வேண்டும்.

வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் அனைத்து 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணியை அரசு ஊழியர்களும், பொதுமக்களும் வீழ்த்த வேண்டும். அவ்வாறு வீழ்த்தினால், அதற்கு அடுத்த மாதமே பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட அனைத்துக் கோரிக்கைகளையும் திமுக அரசு நிறைவேற்றும். ஆகவே அரசு ஊழியர்களே, ஆசிரியர்களே திமுக அரசின் தோல்வியையும், உங்களின் வெற்றியையும் வரும் 19-ஆம் தேதி தேர்தலில் தீர்மானியுங்கள்.உங்கள் கோரிக்கையை வென்றெடுப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது. எனவே, உங்கள் அரசியல் நிலைப்பாடுகள் அனைத்தையும் ஒதுக்கி வைத்து விட்டு, இந்த ஒருமுறை திமுகவை வீழ்த்த வாக்களியுங்கள்.

இவ்வாறு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply