மார்ச் 11 அன்று பிரதமர் ஹரியானா பயணம் .

பிரதமர் திரு. நரேந்திர மோடி, 2024 மார்ச் 11 அன்று ஹரியானா மாநிலம் குருகிராமுக்குப் பயணம் மேற்கொள்கிறார். நண்பகல் 12 மணியளவில், நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 112 தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டுவார்.

தேசிய நெடுஞ்சாலை எண் 48-ல் தில்லி மற்றும் குருகிராம் இடையே போக்குவரத்தை மேம்படுத்தவும், போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், வரலாற்றுச் சிறப்புமிக்க துவாரகா விரைவுச் சாலையின் ஹரியானா பகுதியை பிரதமர் தொடங்கி வைக்கிறார். துவாரகா அதிவேக 8 வழி நெடுஞ்சாலையின் 19 கி.மீ நீளமுள்ள ஹரியானா பிரிவு, சுமார் ரூ .4,100 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.10.2 கி.மீ நீளமுள்ள தில்லி-ஹரியானா எல்லை முதல் பசாய் ரெயில்-ஓவர்-பிரிட்ஜ் (ஆர்.ஓ.பி) மற்றும் 8.7 கி.மீ நீளமுள்ள பசாய் ரோப் முதல் கெர்கி தௌலா வரை இரண்டு தொகுப்புகளை இது உள்ளடக்கியது. இது தில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மற்றும் குருகிராம் புறவழிச்சாலைக்கு நேரடி இணைப்பை வழங்கும்.

நாங்லோய் – நஜாஃப்கர் சாலை முதல் தில்லியில் செக்டார் 24 துவாரகா பிரிவு வரை 9.6 கி.மீ நீளமுள்ள இரண்டாவது கட்ட நகர்ப்புற விரிவாக்க ஆறு வழிச் சாலையின்  3-வது தொகுப்பு ; உத்தரப் பிரதேசத்தில் சுமார் ரூ .4,600 கோடி செலவில் லக்னோ வட்டச் சாலையின் மூன்று தொகுப்புகள்; ஆந்திர மாநிலத்தில் சுமார் ரூ.2,950 கோடி செலவில் தேசிய நெடுஞ்சாலை 16ல் ஆனந்தபுரம் – பெண்டுர்த்தி – அனகாபள்ளி பிரிவு; இமாச்சலப் பிரதேசத்தில் சுமார்  ரூ.3,400 கோடி மதிப்புள்ள தேசிய நெடுஞ்சாலை 21-ன் கிராத்பூர் முதல் நெர்சௌக் பிரிவு (2 தொகுப்புகள்); கர்நாடகாவில் ரூ.2,750 கோடி மதிப்பில் டோபாஸ்பேட் – ஹெஸ்கோட் பிரிவு (இரண்டு தொகுப்புகள்) மற்றும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ரூ.20,500 கோடி மதிப்பிலான 42 இதர திட்டங்கள், பிரதமரால் தொடங்கி வைக்கப்படும் பிற முக்கிய திட்டங்களில் அடங்கும்.

நாடு முழுவதும் பல்வேறு தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். ஆந்திராவில் ரூ.14,000 கோடி மதிப்பிலான பெங்களூரு – கடப்பா – விஜயவாடா விரைவுச் சாலையின் 14 தொகுப்புகள்; கர்நாடகாவில் ரூ. 8,000 கோடி மதிப்பில் தேசிய நெடுஞ்சாலை 748ஏ-இன் பெல்காம் – ஹங்குந்த் – ராய்ச்சூர் பிரிவின் ஆறு தொகுப்புகள்; ஹரியானாவில் ரூ .4,900 கோடி மதிப்புள்ள ஷாம்லி – அம்பாலா நெடுஞ்சாலையின் மூன்று தொகுப்புகள்; பஞ்சாபில் ரூ.3,800 கோடி மதிப்பில் அமிர்தசரஸ் – பதிந்தா வழித்தடத்தின் இரண்டு தொகுப்புகள்; மேலும், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ரூ.32,700 கோடி மதிப்பிலான 39 இதர திட்டங்களும் இதில் அடங்கும்

இந்தத் திட்டங்கள் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்பின் வளர்ச்சிக்குக் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவதோடு, சமூக-பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், வேலைவாய்ப்புகளை அதிகரிப்பதற்கும், நாடு முழுவதும் உள்ள பிராந்தியங்களில் வர்த்தகம் மற்றும் வணிக செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கும் உதவும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply