அருணாசலப்பிரதேசத்தில் ரூ.724 கோடி மதிப்பிலான 28 உள்கட்டமைப்புத் திட்டங்களை பாதுகாப்பு அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

அருணாசலப்பிரதேசத்தில் ரூ.724 கோடி மதிப்பிலான 28 உள்கட்டமைப்புத் திட்டங்களை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்தார். இதில் அண்டை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 22 பாலங்கள், 3 சாலைகள் மற்றும் 3 இதர திட்டங்கள் அடங்கும். லடாக்கில் 8 திட்டங்களும், அருணாசலப்பிரதேச மாநிலத்தில் 5 திட்டங்களும், ஜம்மு காஷ்மீரில் 4 திட்டங்களும், சிக்கிம், பஞ்சாப், உத்தராகண்ட்  மாநிலங்களில் தலா 3 திட்டங்களும், ராஜஸ்தானில் 2 திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர், ஆயுதப்படையினர் எந்தவித சிரமமின்றி தங்களது நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு, எல்லையோரப் பகுதிகளை இணைத்து அப்பகுதி மக்களுக்கு வாழ்வில் வளர்ச்சி மற்றும் சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார்.

போரில் இந்தியாவிற்கு நம்பிக்கை இல்லை என்றும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் ஏற்பட்டால், சண்டையிடுவதற்கு தயாராகவே இருக்கிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

லடாக் மற்றும் மிசோரம் பகுதிகளில் மின்னணு சாதனங்கள் மூலம் மருத்துவம் சார்ந்த தகவல்களை அனுப்பும் சேவையையும் பாதுகாப்பு அமைச்சர் தொடங்கிவைத்தார். 

திவாஹர்

Leave a Reply