பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்திற்கு இதுவரை ரூ.2.16 லட்சம் கோடி ஒதுக்கீடு.

நவீன டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம் விவசாயிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அதிகாரம் அளித்துள்ளதாக மத்திய உணவுப்பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் திரு பிரஹலாத் சிங் பட்டேல் கூறியுள்ளார்.

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் தொடர்பாக புதுதில்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிஜிட்டல் தொழில்நுட்பம் மூலம்  இடைத்தரகர்களின் தலையீட்டில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம் வாயிலாக விவசாயிகளுக்கு அரசு அளித்த உதவி தற்போது அவர்களை நேரடியாக சென்றடைந்துள்ளது என்றும் அவர் கூறினார். அதன் மூலம் அவர்கள் வர்த்தகம் செய்வதற்கான புதிய வாய்ப்புகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும்  இதற்காக இ-நாம் மண்டித்திட்டம் செயல்படுத்தப்பட்டு சுமார் 2 கோடி விவசாயிகள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். விவசாயிகளின் நலனைக்கருத்தில் கொண்டு ‘விதையில் இருந்து சந்தைக்கு’  என்ற புதிய கருத்தை  மையமாக வைத்து டிஜிட்டல் வேளாண் இயக்கத்தை மோடி அரசு செயல்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். 

2014-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை வேளாண்துறைக்காக ரூ.6,21,940.92 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டத்திற்காக ரூ.2.16 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 11.37 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்திற்காக 2021-22-ம் ஆண்டில் ரூ.16,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், மண்வள அட்டை திட்டத்திற்காக 22.71 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திவாஹர்

Leave a Reply