இலங்கை கடற்படையினருக்கு இந்தியா பயிற்சி அளிக்க கூடாது : பிரதமர் மன்மோகன் சிங்குக்கு , தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கடிதம்

jayalalithapr011213_6521 copypr011213_652-12 copyஇலங்கை கடற்படையினருக்கு இந்தியா பயிற்சி அளிப்பதற்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், பிரதமர் மன்மோகன் சிங்குக்கு இன்று (01.12.2013) ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள ஈழ தமிழர்கள் இனப்படு கொலை செய்யப்பட்டதால் அங்குள்ள ஆட்சியாளர்கள் மீது எழுந்துள்ள எதிர்ப்பு பற்றியும் அவர்களுடன் இந்திய அரசு கொண்டுள்ள உறவு பற்றி தமிழர்களிடம் ஏற்பட்டுள்ள வலுவான மனஉணர்வு பற்றியும் கடந்த 2 ஆண்டுகளில் உங்களுக்கு நான் பல தடவை கடிதம் எழுதி இருக்கிறேன்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து நடந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து ஏற்கனவே தமிழக சட்டசபையில் 4 தடவை தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் அப்பாவி, ஏழை தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் காரணமின்றி தாக்கி, சித்ரவதை செய்து, சட்ட விரோதமாக கடத்தி செல்லும் போக்கு அங்குள்ள ஆட்சியாளர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அப்படி கடத்தி செல்லப்படும் தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது சிறைக்காவல் பல தடவை நீட்டிக்கப் பட்டிருப்பதோடு, அந்த ஏழை மீனவர்களின் மீன்பிடி படகுகள், வலைகள் போன்றவற்றை சிங்கள அரசு பறிமுதல் செய்து தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறது.
இதனால் அந்த மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கடும் இழப்பு ஏற்பட்டு இருப்பதோடு, அவர்கள் மன ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை இறுதிக்கட்டப் போரில் படுகொலை செய்யப்பட்டவர்கள் பற்றி கணக்கெடுப்பு தேவை என்று வற்புறுத்தப்பட்டு வரும் நிலையில், அங்கு தமிழர்களுக்கு எதிரான அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்து வருவதால், தமிழ் நாட்டில் சமுதாயத்தின் எல்லா பிரிவு மக்களிடமும் இலங்கைக்கு எதிரான வெறுப்பான மனநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் நடுக்கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை சட்ட விரோதமாக கடத்தி செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாட்டில் உள்ள மீனவர் சமுதாயத்தினர் அனைவரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இதைத் தொடர்ந்தே இலங்கையை ‘‘நட்பு நாடு’’ என்று இந்தியா சொல்லக் கூடாது என்ற வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானம் கடந்த 27–3–2013 அன்று தமிழக சட்ட சபையில் கொண்டு வந்து நிறை வேற்றப்பட்டது.

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் அமைந்துள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க தமிழக மக்களிடம் எழுந்த எதிர்ப்பு குறித்து உங்களுக்கு நான் 16–7–2012, 25–8–2012, 28– 8–2012 மற்றும் 8–6–2013 ஆகிய 4 தடவை கடிதம் எழுதி உங்கள் கவனத்துக்கு கொண்டு வந்தேன்.

அந்த கடிதங்களில், இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல் தாக்குதல்கள் முழுமையாக நிறுத்தப்படும் வரை மற்றும் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் தாக்கி கடத்திச் செல்லப்படுவதில் இலங்கை அரசு திருப்தியாக, நம்பகத் தன்மை ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் வரை தமிழ்நாட்டில் எங்கும் இலங்கை ராணுவத்துக்கு எந்தவித பயிற்சியும் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி இருந்தேன்.

இது தொடர்பாக இந்திய ராணுவத்துக்கு தெளிவான கொள்கை உத்தரவை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்றும் நான் வற்புறுத்தி இருந்தேன்.

மேலும் இலங்கைக்கு போர்க் கப்பல்கள் கொடுக்கும் ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் நான் உங்களுக்கு 11.9.2013 அன்று ஒரு கடிதம் எழுதி இருந்தேன்.

இந்த நிலையில் இந்திய கடற்படை சார்பில் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கு, கடல்சார் பாதுகாப்பு தொழில் நுட்பத்தில் பி.டெக். பட்டபடிப்பு பயிற்சி வழங்கப்பட உள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சேவை சமீபத்தில் இந்திய கடற்படை தளபதி சந்தித்து பேசிய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டு மக்களிடம் இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ராணுவ ஒத்துழைப்பு என்ற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் மன உணர்வுகளுக்கு எதிராக இந்திய அரசு இந்த கொள்கை முடிவை எடுத்துள்ளது.

இந்திய அரசு செய்துள்ள இந்த ஒப்பந்த செயல் திட்டத்தால் இலங்கையில் சிறுபான்மையினராக உள்ள ஈழத் தமிழர்களுக்கு எதிராக அங்குள்ள இலங்கை ஆட்சியாளர்கள் மேலும் வலிமையாக செயல்பட நேரிடும். அது மட்டுமின்றி கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் அப்பாவி ஏழை தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களை அதிகரிக்க செய்து விடும்.

எனவே தமிழக மக்களின் மன உணர்வுகளுக்கு எதிரான, இலங்கையுடனான இந்த உணர்ச்சியற்ற ராணுவ ஒத்துழைப்பு கொள்கைக்கு எனது கடும் எதிர்ப்பை தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையால் இந்த ராணுவ ஒத்துழைப்பு கொள்கையை உடனே மறு பரிசிலினை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

மேலும் இந்திய கடற்படையால் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு படிப்பு பயிற்சி கொடுக்கும் திட்டத்தை தொடர வேண்டாம் என்று பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிவுறுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா கூறியுள்ளார்