பெட்ரோலுக்கு பதிலாக டீசல் : இரவில் மூன்று மணிநேரம் காத்திருந்த முதலமைச்சர்!

CVK-Vikneswaran-vavuniya1

இலங்கை வட மாகாணசபையின் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள சி.வி விக்னேஸ்வரன் மூன்று மணிநேரத்திற்கு மேலாக வவுனியாவில் காத்திருக்கவேண்டிய சம்பவமொன்று நேற்று (23.09.2013) திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு திரும்பும் வழியில் அவர் வவுனியாவில் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

யாழ்ப்பாணம் டில்கோ விடுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விசேட கூட்டமொன்று திங்கட்கிழமை நடைபெற்றது. இந்த கூட்டத்தை முடித்துக்கொண்டு இலங்கை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் கொழும்புக்கு திரும்பிக்கொண்டிருந்தார். சி.வி விக்னேஸ்வரனின் வாகன ஓட்டுநர் வவுனியாவிலுள்ள எரிபொருள் நிரம்பும் நிலையத்தில் வாகனத்தை எரிபொருள் நிரப்புவதற்காக நிறுத்தியுள்ளார்.

   CVK-Vikneswaran-vavuniya

அங்கிருந்த ஊழியர்கள் அந்த வாகனத்திற்கு சுமார் 60 லிட்டர் வரை எரிபொருளை நிரப்பிக்கொண்டிருந்தனர். தற்செயலாக கவனித்தபோது அந்த வாகனத்திற்கு பெட்ரோலுக்கு பதிலாக டீசலை நிரப்பிக்கொண்டிருந்தமை கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனையடுத்து அங்கிருந்தவர்கள் கார் மெக்கானிக்கை அழைத்து வந்து வாகனத்தின் எரிபொருள் தாங்கியை கழற்றி துப்பரவு செய்து மீண்டும் பொருத்தி பெட்ரோல் நிரப்பினர். மூன்று மணிநேரத்திற்கு பின்னரே அவர் தனது பயணத்தை தொடர்ந்தார்.

அவருடைய வாகனத்திற்கு பின்னால் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரவணபவன், தேசியப்பட்டியல் நாளுமன்ற உறுப்பினர்  எம். சுமந்திரன் ஆகியோரும் பயணத்தை மேற்கொண்டனர். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நெருக்கடியான நிலைமைக்கு முகம் கொடுத்திப்பதாக கேள்வியுற்று ஸ்தலத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸ் தலைமைய பொறுப்பதிகாரி டி. கே. அபயரட்ண அவருக்கு தேவையான உதவிகளை மேற்கொண்டிருந்ததுடன் பாதுகாப்பினையும் வழங்கியிருந்தார்.

இதேவேளை அங்கு பிரசன்னமாகியிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் பிரேமரட்ன சுமதிபால சி. வி. விக்னேஸ்வரனுக்கு கை கொடுத்து கலந்துரையாடியமையும் குறிப்பிடத்தக்கதாகும்.