மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் இளைஞர் நலன் & விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், புதுதில்லியில் இன்று ஒலிபரப்பு சேவை இணையதளத்தை தொடங்கி வைத்தார், இது ஒலிபரப்புத்துறையில் தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நடவடிக்கையில் புதிய அத்தியாயத்தைப் படைக்கும். ஒலிபரப்பாளர்கள் பல்வேறு வகையான உரிமங்கள், அனுமதி, பதிவுகளுக்காக விண்ணப்பிக்கும் நடவடிக்கையை விரைவுப்படுத்த இந்த ஒலிபரப்பு சேவை இணையதளம் விரைவுப்படுத்தும்.
நிகழ்ச்சியில் பேசிய அனுராக் தாக்கூர், அரசின் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, மேலும் பொறுப்புடையதாக மாற்ற அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார். விண்ணப்பங்கள் பல்வேறு பிரிவுகளின் அனுமதிக்காக எடுத்துக்கொள்ளப்படும் நேரத்தை இந்த இணையதளம் பெருமளவு குறைக்கும் அதே நேரத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தின் நிலையை அறிந்து கொள்ளவும் உதவிகரமாக இருக்கும். மேலும் மனிதத் தலையீடுகளை தவிர்ப்பதோடு அமைச்சகத்தின் திறனை அதிகரிப்பதுடன் தொழில் தொடங்குவதை எளிதாக்குவதில் பெரும் முன்னேற்றமாக கருதப்படுகிறது.
தனியார் செயற்கைக் கோள் தொலைக்காட்சி அலைவரிசைகள், டெலிபோர்ட் பயன்பாட்டாளர்கள், எம் எஸ் ஓ-க்கள் , சமுதாயம் மற்றும் தனியார் வானொலி அலைவரிசை, நடத்துவோருக்கான சேவைகளை, டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ் ஒரே குடையில் வழங்குவதாக இந்த இணையதளம் இருக்கும் என்றும் திரு அனுராக் தாக்கூர் தெரிவித்தார். மேலும். ‘குறைந்தபட்ச அரசு, அதிகபட்ச ஆளுகை’ என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் தாரக மந்திரத்தை நிறைவேற்றுவதாக இந்த இணையதளம் திகழும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தொழில் சூழலை மேம்படுத்தி ஒட்டுமொத்த ஒலிபரப்புத்துறைக்கு அதிகாரம் அளிப்பதோடு, 900-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள் தொலைக்காட்சி அலைவரிசைகள், 70 டெலிபோர்ட் ஆபரேட்டர்கள், 1,700 பல்வகை சேவை ஆபரேட்டர்கள். 350 சமுதாய வானொலி நிலையங்கள், 380 தனியார் பண்பலை அலைவரிசைகளுக்கு நேரடியாக பலனளிக்கும் என்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
–எம்.பிரபாகரன்
