டெல்லி ஜந்தர்மந்தரில் 18-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகளை, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து தமது ஆதரவை தெரிவித்துள்ளார். அவர்களின் குறைகளையும் கேட்டறிந்தார்.
கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1.40 லட்சம் கோடி கடனை பணக்காரர்களுக்காக மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், விவசாயிகள் கடனை ரத்து செய்ய மத்திய அரசு ஏன் மறுக்கிறது என்பது புரியவில்லை. பணக்காரர்களின் கடனுக்கு சலுகை அளிக்கும் நரேந்திர மோதி, விவசாயிகளை புறக்கணிப்பதும், அவர்களது கோரிக்கைக்கு செவி சாய்க்காததும் ஏன்?
தமிழ்நாட்டு மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பிரதமரிடம் இருந்து உரிய பதில் தேவை. அவர்களை அவமதிப்பது ஏற்புடையது அல்ல. இந்தியர்கள் யாரும் இதனை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். விவசாயிகளின் மூன்று கோரிக்கைகளுக்கும் தீர்வு காணப்படவேண்டியது அவசியம்.
இவ்வாறு ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-எஸ்.சதிஸ் சர்மா.
