ஆந்திரப் பிரதேசத்தின் மத்திய பழங்குடியினப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்பு.

ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரத்தில் உள்ள ஆந்திரப் பிரதேச மத்திய பழங்குடியினப் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

விழாவில் பேசிய குடியரசுத் தலைவர், இப்பல்கலைக்கழகம் பழங்குடியினச் சமூகத்தினரிடையே தன்னம்பிக்கை, தலைமைத்துவம், கொள்கை வகுக்கும் திறன்களை வளர்க்கும் மையமாக விளங்கும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார். சமூக நீதியை நிலைநாட்ட உருவாக்கப்பட்ட நிறுவனங்கள், அந்த பிராந்தியத்தில் உள்ள பழங்குடியின மக்களின் கல்வி, ஆரோக்கியம், திறன் மேம்பாடு, வாழ்வாதாரம், வனம் சார்ந்த உரிமைகள் ஆகியவற்றுக்காக அடித்தட்டு அளவில் பணியாற்ற வேண்டியது அவற்றின் கடமை என்று குறிப்பிட்டார்.

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக் வனம் சார்ந்த பொருட்கள், கைவினைப் பொருட்கள், சிறுதானியங்கள், மருத்துவத் தாவரங்கள், சூழலியல் சுற்றுலா ஆகியவற்றில் புதுமையான வழிமுறைகளை அனைத்துப் பல்கலைக்கழகங்களும் செயல்படுத்த வேண்டும் என்றும் குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டார்.

மாணவர்கள் தங்களின் சமூகம், பண்பாடு, மரபுகளுடன் இணைந்திருந்து, சமுதாயம், நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்தப் பாடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதே நமது இலக்காகும் என்று தெரிவித்த அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் உள்ளடக்கிய, நடைமுறை கற்பித்தல் முறையின் மூலம் இந்த இலக்கை அடைவதில் இப்பல்கலைக்கழகம் முக்கியப் பங்கு வகிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply