செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் இயங்கும் ஊரக உள்ளக தணிக்கை இணையதளம் – மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தொடங்கி வைத்தார்.

புதுதில்லியில் உள்ள பூசா வளாகத்தில் நடைபெற்ற தேசிய கிராமப்புற வளர்ச்சி மாநாட்டின்போது (ராஷ்ட்ரிய கிராமின் விகாஸ் சம்மேளன்), மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் இன்று (28.06.2026) ‘ஊரக உள்ளகத் தணிக்கை வலைதளத்தை’ தொடங்கி வைத்தார். செயற்கை நுண்ணறிவு  தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த இணையதளம், ஊரக வளர்ச்சி தொடர்பான நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கியப் படியாகும்.

வழக்கமான தணிக்கை நடைமுறைகளை நவீனமயமாக்க வேண்டியதன் அவசியத்தையும், வளர்ந்து வரும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டியதன் தேவையையும் உணர்ந்து, ஊரக வளர்ச்சி அமைச்சகம், முதல் ஒருங்கிணைந்த டிஜிட்டல் தளமான ஊரக உள் தணிக்கை வலைதளத்தை உருவாக்கியுள்ளது. ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் தலைமை கணக்குக் கட்டுப்பாட்டாளர் அலுவலகத்தால் கருத்தாக்கம் செய்யப்பட்டு, தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்த இணையதளம், அமைச்சகத்தின் டிஜிட்டல் ஆளுகைப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக விளங்குகிறது.

ஊரக உள் தணிக்கை இணையதளம், காகிதப் பயன்பாடு மிகுந்த, பெரும்பாலும் கையால் செய்யப்படும் ஒரு பணியாக இருக்கும் உள் தணிக்கையை, வெளிப்படையான, தொழில்நுட்பத்துடன்கூடிய, தரவுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு மேலாண்மை அமைப்பாக மாற்றியுள்ளது. தணிக்கைத் திட்டமிடல், செயல்படுத்துதல், அறிக்கையிடல், இணக்க மேலாண்மை, கண்காணிப்பு, பகுப்பாய்வு ஆகியவற்றை ஒரே டிஜிட்டல் சூழலுக்குள் இது ஒருங்கிணைக்கிறது. இதன் மூலம், இந்த இணையதளம் ஊரக வளர்ச்சித் திட்டங்களில் டிஜிட்டல் ஆளுகையை வலுப்படுத்தி, உள் தணிக்கையின் செயல்திறனை மேம்படுத்தியுள்ளது.

ஊரக உள் தணிக்கை இணையதளத்தின் வெற்றியானது, ஒரு முன்மாதிரியான டிஜிட்டல் ஆளுகை முன்முயற்சியாக தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. மேம்பட்ட மதிப்பீட்டு வழிமுறைகள், முன்கணிப்புப் பகுப்பாய்வு, அறிவார்ந்த தணிக்கைத் திட்டமிடல், மேம்படுத்தப்பட்ட மேலாண்மை ஆகியவை இதன் பலன்களில் அடங்கும். இவை சான்றுகள் அடிப்படையிலான ஆளுகைக்கு ஆதரவளிப்பதோடு, உள்ளகத் தணிக்கைகளின் தரம், செயல்திறன், உத்திசார் முக்கியத்துவம் ஆகியவற்றை மேலும் மேம்படுத்தும்.

Leave a Reply