பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 12 ஆண்டு கால ஆட்சி, இந்தியாவை வாய்ப்புகள், புதுமைகள், தன்னம்பிக்கை நிறைந்த ஒரு லட்சிய தேசமாக மாற்றியுள்ளது என்று மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். முதலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர். நிர்வாக சீர்திருத்தங்கள், தொழில்நுட்ப ஜனநாயகமயமாக்கல், மக்களை மையமாகக் கொண்ட கொள்கைகள் ஆகியவை இந்தியர்களின் எதிர்காலத்தைச் சிறப்பாக மாற்றியுள்ளன என்றும் அவர் கூறினார். 2047-ஆம் ஆண்டுக்குள் ஒரு வளர்ந்த நாடாக மாறும் இலக்கை நோக்கி இந்தியா முன்னேறி வரும் நிலையில், தற்போது சுமார் 9 பில்லியன் டாலராக உள்ள இந்தியாவின் விண்வெளிப் பொருளாதாரம், அடுத்த 7 முதல் 8 ஆண்டுகளில் சுமார் 45 பில்லியன் டாலராக விரிவடையும் என்று அவர் கூறினார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகத் தொடர்ந்து பதவி வகிக்கும் நரேந்திர மோடியின் 4,399 நாட்களைப் பற்றிப் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், கடந்த 12 ஆண்டுகளில் ஏற்பட்ட பல்வேறு நல்ல மாற்றங்களை எடுத்துரைத்தார். இந்தியாவின் விண்வெளிப் புத்தொழில் சூழலமைப்பு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒற்றை இலக்க எண்ணிக்கையில் இருந்த நிலையில் இருந்து இப்போது சுமார் 400 ஆக வளர்ந்துள்ளது என்று அவர் கூறினார்.
நாட்டின் புத்தொழில் சூழலமைப்பு 2014-ல் சுமார் 400 என்ற நிலையில் இருந்து தற்போது 2.3 லட்சத்திற்கும் மேலாக விரிவடைந்து, கிட்டத்தட்ட 25 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று அமைச்சர் கூறினார். இவற்றில் கிட்டத்தட்ட பாதி இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் அமைந்துள்ளன எனவும் இவற்றில் 39 சதவீதம் பெண்களால் நடத்தப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசின் சீர்திருத்தங்கள், மக்களை மையமாகக் கொண்ட ஆட்சிமுறையை நோக்கிய ஒரு மாற்றத்தைக் குறிப்பதாக டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார். ஆவணங்களுக்கு அரசிதழ் அதிகாரி சான்றொப்பம் கோரும் தேவையை முடிவுக்குக் கொண்டுவந்து, சுய சான்றொப்பத்திற்கு அனுமதிக்கும் முடிவை, மக்கள், குறிப்பாக இளைஞர்கள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கை நடவடிக்கையாக அவர் குறிப்பிட்டார். அரசுப் பணி நியமனங்களின் பல பிரிவுகளில் நேர்காணல்கள் ஒழிக்கப்பட்டதையும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த 12 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக ஆழமான மாற்றம், நடைமுறை சார்ந்தது மட்டுமல்லாமல் உளவியல் ரீதியானது என்றும் அவர் கூறினார். அரசின் நீண்டகால நோக்கம் என்பது வெறும் பொருளாதார வளர்ச்சி மட்டுமல்ல எனவும், மாறாக 2047-ம் ஆண்டிற்குள் வளர்ந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு பங்களிக்கக்கூடிய, அதிகாரம் பெற்ற, லட்சியம் நிறைந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதே ஆகும் என்றும் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
எம்.பிரபாகரன்
