தலைநகர் தில்லியில் உள்ள தியாகராஜ் விளையாட்டு வளாகத்தில் இன்று நடைபெற்ற ‘வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான இளைஞர்கள்: மை பாரத் இளையோர் மாநாட்டில்’, மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா ஆகியோர் உரையாற்றினர்.
மாணவர்கள், இளம் தொழில் வல்லுநர்கள், இளம் பெண்கள், தொழில்முனைவோர்கள், உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள், புதுமைக் கண்டுபிடிப்பாளர்கள், வளர்ந்து வரும் தலைவர்கள், சாதனையாளர்கள் எனப் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.
நாட்டின் கட்டமைப்புப் பணியிலும், 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை உருவெடுக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளில் இளைஞர்களிடையே மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பங்களிப்பை வழங்குவதற்கான அவசியத்தை இந்த மாநாடு வெளிப்படுத்தியது.
சட்டப்பேரவை உறுப்பினரும், பாடகியுமான திருமதி மைதிலி தாக்கூர், நடிகர் திரு விக்ராந்த் மாஸ்ஸி, தொழில்முனைவோர் திரு அமன் குப்தா, இந்திய கிரிக்கெட் வீரர் திரு ஜிதேஷ் சர்மா உள்ளிட்ட பிரபலங்கள், ‘மை பாரத்’, நாட்டு நலப் பணித் (என்எஸ்எஸ்) அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்களுடன் கலந்துரையாடிய போது, தங்களது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். மேலும், இளைஞர்கள் சிறந்த எதிர்காலத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும், அர்த்தமுள்ள பங்களிப்பை அளிக்கவும் அவர்கள் ஊக்கமளித்தனர்.
6,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்ற இந்த இளையோர் மாநாடு, நாடு முழுவதும் இளைஞர்களின் செயல்பாடுகள் சார்ந்த முக்கிய முன்முயற்சிகளையும் காட்சிப்படுத்தியது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய மத்திய அமைச்சர் டாக்டர் மாண்டவியா, நாட்டின் மக்கள் தொகையில், 65 சதவீதம் பேர், 35 வயதுக்குட்பட்டவர்கள் என்ற நிலை, மக்கள் தொகை சார்ந்த சாதகமான சூழல் இருப்பதைச் சுட்டிக்காட்டினார். இளைஞர்கள், நாட்டின் மிகப்பெரிய சக்தியாக திகழ்கின்றனர் என்றும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில், அவர்கள் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எம்.பிரபாகரன்
