திரிபுராவில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுடன் மத்திய அமைச்சர் அமித்ஷா கலந்துரையாடினார்.

மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, திரிபுரா மாநிலத்தில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையின் லங்காமுரா எல்லைச் சாவடியைப் பார்வையிட்டு, அங்குள்ள பாதுகாப்புப்படை வீரர்களுடன் கலந்துரையாடினார். உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் இயக்கத்தின் ஒரு பகுதியாக அவர் அகர் மரக்கன்றை நட்டார். இந்நிகழ்வில் திரிபுரா முதலமைச்சர் டாக்டர் மாணிக் சாகா, மத்திய உள்துறைச் செயலாளர், எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை இயக்குநர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர், கடந்த 2019-ம் ஆண்டு முதல் இன்று வரை அனைத்து மத்திய ஆயுத காவல் படைகளின் வீரர்கள் 7.5 கோடிக்கும் அதிகமான மரக்கன்றுகளை நட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். இனி வரும் ஆண்டுகளில் மேலும் 2 கோடி மரக்கன்றுகளை நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். ஒவ்வொரு வீரரும் ஒரு மரக்கன்றைத் தங்களின் குடும்ப உறுப்பினரைப் போலப் பாதுகாத்து வளர்த்து வருவதாக அவர் கூறினார். பாரிஸ் உடன்படிக்கையின் இலக்குகளைக் காலக்கெடுவிற்கு முன்பே எட்டியதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகிற்கே முன்மாதிரியாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று கூறினார்.

எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். உள்ளூர் நிர்வாகம், நவீனத் தொழில்நுட்பம், பாதுகாப்புப்படை வீரர்களின் அர்ப்பணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்து எல்லையில் எதிரிகள் ஊடுருவ முடியாத பாதுகாப்பு வளையம் உருவாக்கப்படும் என்று கூறினார். இன்றைய தினம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பல்வேறு பிரிவுகளின் மூலம் நாடு முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன.

Leave a Reply