புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறும் மின்சார வாகன கண்காட்சியை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் இன்று (21.12.2025) பார்வையிட்டார். உள்நாட்டு நிறுவனங்களால் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பரந்த அளவிலான மின்சார வாகனங்களைப் பார்வையிட்டு இந்திய தயாரிப்புகளை ஆய்வு செய்தார்.
கண்காட்சி ஏற்பாட்டாளர்களுடன் அமைச்சர் கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முதல் வேலைவாய்ப்பு உருவாக்கம் வரை, மின்சார வாகனங்கள் இந்தியாவின் அடுத்த வளர்ச்சிக் கதையில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று குறிப்பிட்டார். உள்நாட்டு மின்சார வாகன நிறுவனங்களின் திறனை அவர் பாராட்டினார். இந்தத் துறை தூய்மையான, பசுமையான, நிலையான எதிர்காலத்தை நோக்கிய இந்தியாவின் மாற்றத்தின் முக்கிய தூணாகத் திகழ்கிறது என அவர் குறிப்பிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் நரேந்திர மோடி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாகவும், மின்சார வாகன போக்குவரத்து குறித்தும் பரவலான விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருவதாக கூறினார்.
மின்சார வாகனங்களின் நல்ல தன்மைகளை எடுத்துரைத்த டாக்டர் ஜிதேந்திர சிங், வழக்கமான வாகனங்களுடன் ஒப்பிடும்போது மின்சார வாகனங்கள் ஓட்டுவது எளிமையாக இருப்பதாக தெரிவித்தார். மின்சார வாகனங்களின் பல்துறை திறனையும் அவர் சுட்டிக் காட்டினார், ஆம்புலன்ஸ்கள், மின்-ரிக்ஷாக்கள், பயணிகள் வாகனங்கள், வணிக பயன்பாடுகள் போன்ற பிரிவுகளில் அவற்றின் பயன்பாடு விரிவடைந்து வருவதாக அவர் தெரிவித்தார். மின்சார வாகனத் துறையில் உள்ள வாய்ப்புகள் குறித்து இளைஞர்களிடையே அதிக அளவில் விழிப்புணர்வு தேவை என்றும் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறினார்.
திவாஹர்
