கடந்த பத்தாண்டுகளில், நாடு சுகாதாரம், மருத்துவக் கல்வியில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி கண்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜெ. பி. நட்டா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் 21 – வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். மருத்துவ பட்டம் பெற்ற மாணவர்களுக்கு அவர் வாழ்த்து தெரிவித்தார். மருத்துவ உள்கட்டமைப்பு வசதியில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை அவர் விரிவாக எடுத்துரைத்தார்
கடந்த நூற்றாண்டின் இறுதியில், நாட்டில் ஒரே ஒரு எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மட்டுமே இருந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் 23 எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது தரமான சுகாதாரப் பராமரிப்பு மற்றும் மருத்துவப் பயிற்சியை நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் விரிவுபடுத்துவதில் மத்திய அரசின் அர்ப்பணிப்புணர்வை பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.
கடந்த 11 ஆண்டுகளில் நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 387-லிருந்து 819 ஆக அதிகரித்துள்ளது என்று அவர் தெரிவித்தார். இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் 51,000-லிருந்து 1,19,000 ஆகவும், முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் 31,000-லிருந்து 80,000 ஆகவும் உயர்ந்துள்ளதாக திரு ஜெ. பி. நட்டா தெரிவித்துள்ளார்.
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், எம்.டி / எம்.எஸ், டி.எம் / எம்.சி.எச்., எம்.டி.எஸ், எம்.எஸ்சி. நர்சிங், ஆசிரியப் பிரிவுகளில் சிறப்பான கல்வி, மருத்துவ மற்றும் ஆராய்ச்சியில் படைத்த சாதனைகளுக்காக 81 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர்
உத்தரப் பிரதேச மாநில ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், அம்மாநிலத் துணை முதலமைச்சர், மாநில மருத்துவக் கல்வி, மருத்துவம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு பிரஜேஷ் பதக், மத்திய நிதித்துறை இணையமைச்சர் திரு பங்கஜ் குமார், அம்மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திரு மயங்கேஷ்வர் சரண் சிங் மற்றும் மத்திய முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய் குமார் சூட் ஆகியோர் பங்கேற்றனர்.
எஸ்.சதிஸ் சர்மா
