உலகை அச்சுறுத்தும் பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உறுதியான நடவடிக்கைகள் தேவை !– குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு.

புதுதில்லியில் சர்வதேச சூரியசக்திக் கூட்டமைப்பின் 8-வது அமர்வின் முழுமையான அமர்வை குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று (28.10.2025) தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், உள்ளடக்கம், கண்ணியம், கூட்டு செழுமைக்கான ஆதாரமாக சூரியசக்தியைப் பயன்படுத்துவதற்கு, மனித சமூகத்தின் பகிரப்பட்ட விருப்பத்தின் அடையாளமாக சர்வதேச சூரியசக்திக்  கூட்டமைப்புத் திகழ்கிறது என்று குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றம், முழு உலகையும் பாதிப்பதாக குடியரசுத்தலைவர் கூறினார். இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு உடனடியான, உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இந்தியா உறுதிபூண்டுள்ளதாகவும் அதற்காக தீர்க்கமான நடவடிக்கைகளை பின்பற்றுவதாகவும் அவர் கூறினார். சூரிய சக்தியை ஏற்றுக் கொண்டு, பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் இந்த உலகளாவிய சவாலுக்கு தீர்வு காண்பதையொட்டிய சிறப்புமிக்க நடவடிக்கையை சர்வதேச சூரியசக்திக் கூட்டமைப்பு மேற்கொள்வதாக அவர் தெரிவித்தார்.

ஊரகப் பகுதிகளில் உள்ள வீடுகளை ஒளிரச் செய்த நமது அனுபவம் எரிசக்தி சமத்துவம், சமூக சமத்துவத்தின் அடிப்படை என்ற நமது நம்பிக்கையை உறுதிபடுத்துகிறது என்று குறிப்பிட்டார்.  குறைந்த கட்டணத்தில் தூய்மை எரிசக்திக் கிடைப்பது சமூகத்திற்கு அதிகாரம் அளித்து உள்ளூர் பொருளாதாரத்திற்கு ஆதரவளித்து, மின்சாரம் வழங்குவதற்கு அப்பால் வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகக் கூறினார். சூரிய எரிசக்தி என்பது வெறும் மின் உற்பத்தி மட்டுமின்றி அதிகாரம் அளித்தல் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பற்றியதாகும் என்று அவர் தெரிவித்தார். உறுப்பு நாடுகள், உள்கட்டமைப்புக்கு அப்பால், மக்களின் வாழ்வாதாரத்தில் கவனம் செலுத்துமாறு குடியரசுத்தலைவர் வலியுறுத்தினார்.

இந்த அமர்வு வேலைவாய்ப்பு, மகளிர் தலைமை, ஊரக வாழ்வாதாரம் மற்றும் மின்னணு உள்ளடக்கத்துடன் சூரியசக்தியை இணைக்கும் கூட்டு நடவடிக்கையை உருவாக்க வேண்டும் என்று குடியரசுத்தலைவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Reply