ஆயுதப்படைகளுக்காக ரூ.79,000 கோடி மதிப்பிலான ஆயுத தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு புதுதில்லியில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்புத் தளவாட கொள்முதல் குழுமம் ஒப்புதல் அளித்துள்ளது. எதிரிகளின் போர் வாகனங்கள், பதுங்குக் குழிகள், உள்ளிட்டவற்றை அழிப்பதற்கான இந்திய ராணுவத்தின் திறனை மேம்படுத்த எம்கே-II நாக் ஏவுகனைகளை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினருக்கு தேவையான சரக்கு போக்குவரத்திற்காக அதிநவீன வாகனங்கள் கொள்முதல் செய்வதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 30 எம்எம் கடற்படைத் துப்பாக்கி, மேம்பட்ட இலகுரக நீர்மூழ்கிக் குண்டுகள், 76 எம் எம் அதிநவீன துப்பாக்கிக்கான வெடிமருந்து உள்ளிட்டவற்றை இந்தியக் கடற்படைக்காக கொள்முதல் செய்வதற்கு இந்த ஒப்பந்தம் வகை செய்துள்ளது. கடல்சார் நடவடிக்கை மற்றும் கடல்கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்திய கடற்படை மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையின் திறனை மேம்படுத்துவதற்காக 30 எம்எம் துப்பாக்கி கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா
