வனப்பகுதிகள் மிகவும் முக்கியமானவை என்றும் வனப்பகுதிகள் நமது நுரையீரலாக இருப்பதாகவும் குடியரசுத் துணைத் தலைவர் திரு ஜகதீப் தன்கர் கூறினார்.
சிர்சியில் உள்ள வனவியல் கல்லூரியில் நாட்டின் கட்டமைப்பில் வனத்துறையின் பங்கு என்ற தலைப்பில் கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே உரையாற்றிய அவர், ஒரு நாட்டின் வனப்பகுதிகள் நல்ல நிலைமையில் இருந்தால், மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்றும் அதற்கு காரணம் வனப்பகுதிகள் நமது நுரையீரல்களாகத் திகழ்கின்றன என்றும் அவர் தெரிவித்தார். வேளாண்மை நமது உயிர்நாடி என்று கூறிய அவர், பருவநிலையை ஒழுங்குபடுத்துவதாலும், பேரிடர்களைத் தடுப்பதாலும், வாழ்வாதாரத்தை ஆதரிப்பதாலும் நமக்கு வனப்பகுதிகள் தேவை என்று குறிப்பிட்டார். குறிப்பாக ஏழைகள் மற்றும் விளிம்புநிலை சமூகத்தினருக்கு வனப்பகுதிகளின் தேவை அவசியம்” என்று அவர் மேலும் கூறினார்.
நமது காடுகளைப் பாதுகாக்கவும், சாத்தியமான அனைத்து வழிகளிலும் அதற்கு பங்களிக்கவும் நாம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்தியாவின் நாகரிக ஞானத்தை எடுத்துரைத்த குடியரசு துணைத் தலைவர், இந்த நிலம் ஆன்மீகம் மற்றும் நிலைத்தன்மையின் சங்கமம் என்றும் குறிப்பிட்டார். நிலைத்தன்மை என்பது பொருளாதாரத்திற்கு மட்டுமல்லாமல் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் இன்றியமையாதது என்று அவர் விளக்கினார். இயற்கை வளங்களை பொறுப்பற்ற முறையில் சுரண்டுவதில் நாம் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்திய அவர், குறைந்தபட்சமாகத் தேவையானவற்றிற்கு மட்டுமே நாம் அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இது குறித்து நாம் அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்று கூறினார்.
நாம் சுற்றுச்சூழல், காடுகள், சுற்றுச்சூழல் அமைப்புகள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் ஆகியவற்றின் பாதுகாவலர்கள், அவற்றின் நுகர்வோர் அல்ல என்றும் தெரிவித்த அவர், இதை எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துரைக்க நாம் கடமைப்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்டார்.
நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் கல்வியின் பங்களிப்பு குறித்து குறிப்பிட்ட குடியரசு துணைத் தலைவர், தற்போது, எந்த நிறுவனமும் தனித்தனி நிறுவனமாக செயல்பட முடியாது என்று கூறினார். மருத்துவக் கல்வி, பொறியியல் கல்வி, மேலாண்மைக் கல்வி, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் வனக் கல்வி என அனைத்தும் பல துறைகளுக்கு இடையேயான படிப்பாகிவிட்டன என்று அவர் தெரிவித்தார்.
புதிய அறிவைத் தேடும் ஆர்வம் இருக்க வேண்டும் என்றும் கல்வித் தேடல் கற்பனைக்கு அப்பாற்பட்ட மகத்தான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது என்றும், குடியரசு துணைத்தலைவர் கூறினார்.
திவாஹர்
