ஏரி நீரில் இரசாயனக் கழிவுகள்..! மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஊதியத்தைப் பிடித்தம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும்! -மறியல் போராட்டத்திற்கு தயாராகி வரும் தூசூர் ஏரி மீட்புக் குழுவினர்.

தூசூர் ஏரி ( Thusur Lake)

தூசூர் ஏரி ( Thusur Lake) நாமக்கல் மாவட்டத்தின் மிகப் பெரிய ஏரியாகும். இது நாமக்கல்-துறையூர் சாலையில் எட்டு கி.மீ. தொலைவில் உள்ளது. சுமார் 600 ஏக்கர் பரப்பு கொண்ட இந்த ஏரி. நாமக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. தூசூர் ஏரியின் மூலம் 1000 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நெல், கரும்பு, கேழ்வரகு போன்ற பயிர்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கி வருகிறது.

நாமக்கல் மாநகர சாக்கடை மற்றும் இரசாயனக் கழிவு நீர் அனைத்தும் இந்த ஏரியில் கலப்பதால் நிலத்தடி நீரும், விவசாய நிலங்களும் மாசடைந்துள்ளது. இந்த ஏரிப்பாசன நீரைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கும், கால்நடைகளுக்கும் பல்வேறு தொற்றுநோய்கள் ஏற்பட்டு வருகிறது.

ஏரியைப் பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தனிப்பட்ட ஆதாயத்திற்காக இதை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார்கள்.

மேலும், தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தூசூர் ஏரிப் பராமரிப்பு, பாசனப் பகுதி மதகு மற்றும் கால்வாய் பராமரிப்பு மற்றும் இதர நீர் மேலாண்மைப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை முறையாகப் பயன்படுத்தவில்லை. இதில் மிகப்பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது. எனவே, இது குறித்து “வெள்ளை அறிக்கை” வெளியிட வேண்டும் என்று தூசூர் ஏரி மீட்பு குழுவினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூசூர் ஏரியின் இந்த அவல நிலைக்கு காரணமான மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் ஊதியத்தைப் பிடித்தம் செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

போர்க்கால அடிப்படையில் தூசூர் ஏரியை தூர்வாரிப் பராமரிக்க வலியுறுத்தி நவம்பர் 17ஆம் தேதி மறியல் போராட்டம் செய்ய இருப்பதாக விவசாயிகள் நல கூட்டமைப்பின் தலைவர் திருமுருகன் சுப்ரமணியன் தமிழக அரசின் அனைத்துத் துறைச் சார்ந்த அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தின் உண்மை நகல், எமது “UTL MEDIA TEAM” செய்திக். குழுவுக்கும் வந்துள்ளது.

இதற்கு தமிழக அரசும், நாமக்கல் மாவட்ட மற்றும் மாநகர அரசு நிர்வாகமும் என்ன பதில் சொல்லப்போகிறது?

Leave a Reply