மத்திய ஆயுஷ் அமைச்சகம் மொரார்ஜி தேசாய் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் யோகாவுடன் (MDNIY) இணைந்து, 2023 மார்ச் 13,14 ஆகிய தேதிகளில் டெல்லியின் டால்கடோரா மைதானத்தில் யோகா திருவிழாவையும், இதனைத் தொடர்ந்து மார்ச் 15-ம் தேதி யோகா பயிற்சிப் பட்டறைகளையும் ஏற்பாடு செய்துள்ளது. இந்த ஆண்டின் சர்வதேச யோகா தினம் (IDY) இந்தியாவின் ஜி-20 தலைமையில் கருப்பொருளான “ஒரே உலகம், ஒரே ஆரோக்கியம்” என்ற கொள்கையை பிரதிபலிக்கிறது.
மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு.சர்பானந்தா சோனோவால், யோகா திருவிழா 2023-ஐத் தொடங்கி வைக்கிறார்.
யோகா திருவிழா 2023 என்பது 9-வது சர்வதேச யோகா தினத்தின் 100 நாட்கள் கவுண்ட்டவுனை நினைவுகூரும் ஒரு நிகழ்வாகும். அன்றைய தினம், நாடு முழுவதும் 100 நாட்களுக்கு, 100 நகரங்களில் 100 அமைப்புகள் யோகா தொடர்பான தங்களது செயல்பாடுகளைத் தொடங்கும்.
இந்த ஆண்டு, யோகா திருவிழாவில் அங்கன்வாடி பணியாளர்கள்/ஆஷா பணியாளர்கள்/சுயஉதவிக் குழுக்கள், மகளிர் நல அமைப்புகள் உள்ளிட்ட பல துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கவுள்ளனர். மத்திய ஆயுஷ் அமைச்சகம் கடந்த 8 ஆண்டுகளாக சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து சர்வதேச ஆதரவைப் பெற்றுள்ளது. இந்திய அரசின் மற்ற அமைச்சகங்கள் / அமைப்புகள் / நிறுவனங்களின் ஆதரவின் மூலம் ஆயுஷ் அமைச்சகமானது யோகாவின் செய்தியை உலகளவில் எடுத்துச் செல்வதில் கடந்த 8 ஆண்டுகளில் பல்வேறு முன்னேற்றங்களைக் கண்டுள்ளது.
எஸ்.சதிஸ் சர்மா
