இலங்கை யுத்தத்தில் இந்திய படையினர் ஈடுபட்டனர் : டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

bikramsingh_vavuniaஇந்திய பாராளுமன்றத்திலும், இந்திய குடியரசு தலைவரிடமும் அனுமதி பெறாமல், இலங்கை யுத்தத்தில் இந்திய படையினரை ஈடுபடுத்தியதாக இந்திய காங்கிரஸ் கூட்டணி ஆட்சியாளர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த வழக்குரைஞர் ராம்சங்கர் என்பவர், இந்திய உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவில் சீக்கியர் ஒருவர் இலங்கையில் 2008 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் இடம் பெற்ற யுத்தத்தை வழி நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரை நேரடியாக கண்ட சாட்சிகளும், ஆதாரங்களும் தம்மிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இவ்வாறு இந்திய இராணுவம், வான்படை மற்றும் கடற்படை ஆகியோர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியாவில் யுத்தம் பிரகடனம் செய்யப்படாத நிலையில், இந்திய அரசியல் அமைப்பின் படி, இந்திய படையினரை இலங்கையில் ஈடுபடுத்தியமை சட்ட விரோதமானது என்று அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த  பிரச்சனை தொடர்பாக விசாரணை நடத்துவதற்கான தீர்ப்பாயம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த மனு நாளை மறுதினம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.