நதி நீர் இணைப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.

தமிழக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்.

mksmks1mks2mks3

நதி நீர் இணைப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோதிக்கு, தமிழக எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது,

மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் இணைப்பு பிரச்சனைகளால் தமிழகம் இன்றைக்கு மிக மோசமான சூழலை அனுபவித்து வருகிறது என்பதையும், தமிழக விவசாயிகள் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சொல்லொனாத் துயரினை ஒவ்வொரு நாளும் சந்தித்து வருகின்றனர் என்பதையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

அண்டை மாநிலங்களில் இருந்து உரிய நீரினை பெறுவதற்கு போராட்டம், பொய்த்து விட்ட பருவ மழை மற்றும் மோசமான வறட்சி போன்றவை விவசாயிகளின் அன்றாட வாழ்க்கையையும், அவர்களது வாழ்வாதாரத்தினையும் பெரிதும் பாழ்ப்படுத்தியுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள்.

அண்டை மாநிலங்களுடன் எப்போதும் சுமூகமாகவும், சகோதர மனப்பான்மையுடனும் என்றும் அணுகி வரும் தமிழகத்தின் முயற்சிகளுக்கு மாறாக, ஒவ்வொரு வருடமும் தமிழகத்திற்கு கிடைக்கும் நீர்பாசன ஆதாரங்களை முடக்குவதும், மாநிலங்களுக்கு மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் ஒப்பந்தங்களை மீறி அநியாயமாக தடுப்பணைகள் கட்டுவதும் அண்டை மாநிலங்களின் எதேச்சதிகாரமான போக்காக மாறி வருகிறது.

தற்போதைய சூழலில், நாட்டின் விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற நதிநீர் இணைப்பு மட்டுமே காலத்தின் கட்டாயம் என்பதையும், நீண்ட காலத்தீர்வு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த தருணத்தில் 2002- ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி, மிகச்சிறந்த தொலைநோக்கு பார்வை கொண்ட மறைந்த அப்துல் கலாம் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்ததை கனிவுடன் நினைவு கூறுகிறேன். “ஒரு பக்கம் வெள்ளம், ஒரு பக்கம் வறட்சி என நமது தேசம் ஒரு முரண்பாட்டினை வெகு காலமாக கண்டும் உணர்ந்தும் வருகிறது. ஆதலால், நீர் மேலாண்மை தான் தற்போது நமது நாட்டிற்கு மிக அவசியம் தேவை” என்ற அந்த கருத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நீர் நமது உணவுத் தேவைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும், நாட்டின் உற்பத்தியினை துரிதமாக பெருக்குவதற்கும், சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், சுகாதாரம் மற்றும் நாட்டின் செழிப்பை பேணிப் பாதுகாப்பதற்கும் அத்தியாவசியத் தேவையாக அமைந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். இத்தனை பொன் போன்ற குறிக்கோள்களையும் நிறைவேற்ற நமது கண் முன் இருக்கும் ஒரே தீர்வு நதி நீர் இணைப்பு மட்டுமே.

1972 -ல் மத்திய நீராதார அமைச்சர் கே. எல். ராவ் தொலைநோக்குப் பார்வையுடன் முன் வைத்த நதி நீர் இணைப்புத் திட்டம் பற்றிய விரிவான அறிக்கையை இந்த நேரத்தில் நினைவுபடுத்துவது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

ஆனால், அந்த அறிக்கையின் மீதான  தொடர் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமான தீர்வை இதுவரை எட்டவில்லை. இடையில் நதி நீர் இணைப்புக்கென உருவாக்கப்பட்ட சிறப்பு பணிக்குழு (Special Task Force) கலைக்கப்பட்டு, இறுதியில் மத்திய நீர் வளத்துறை அமைச்சகத்தில் ஒரு பிரிவின் (Cell) கீழ் ஒப்படைக்கப்பட்ட நிலைதான் உருவானது.

எங்கள் தலைவர் டாக்டர் கலைஞர்  தேசிய வளர்ச்சிக் குழு கூட்டத்தில் இரு முறை நதி நீர் இணைப்புத் திட்டத்தின் அவசியத்தை வலியறுத்தி கூறியிருக்கிறார். 29.05.2007 அன்று நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் , “மாநிலங்களுக்கு இடையிலான நதி நீர் இணைப்பு பிரச்சனைகளில் தீர்வு காண உருவாக்கப்பட்ட அமைப்பு ரீதியான ஏற்பாடுகள் தோல்வி அடைந்து வருவதை காட்டுகிறது” என்பதை சுட்டிக்காட்டி, “உடனடியாக நதி நீர் இணைப்பை திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்தார். “நதிகளை இணைப்பது நீண்ட கால தீர்வாக அமையும். அது மட்டுமே தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும்” என்று அக்குழுக்கூட்டத்தில் கூறிய   தலைவர் கலைஞர், “11 வது ஐந்தாண்டு திட்ட காலத்திலேயே நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வற்புறுத்தினார்.

அவர் தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் பேசியதோடு நின்று விடவில்லை.  தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது, மாநிலத்தின் இரு நதிகளை இணைக்கும் திட்டத்தை முதற்கட்டமாக தொடங்கினார். முதலாவதாக, ரூ.189 கோடி மதிப்பில் “காவேரி – குண்டாறு” நதிகளை இணைக்கும் திட்டம். இரண்டாவதாக, ரூ.369 கோடி மதிப்பிலான, “தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு” இணைப்புத்திட்டம். இவை மாநிலத்தில்  முதல் முறையாக துவங்கப்பட்ட நதி நீர் இணைப்புத் திட்டங்கள் என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

நதி நீர் இணைப்பு திட்டங்கள் எதிர்காலத்தில் எண்ணற்ற பலன்களை நாட்டு மக்களுக்கும், குறிப்பாக, பல்வேறு நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நாடு முழுவதும் போராடி வரும் விவசாயிகளுக்கும் மிகுந்த பயனளிக்கும் திட்டமாக இருக்கும் என்பதை மாண்புமிகு பிரதமர் ஏற்றுக் கொள்வார் என உறுதியாக நம்புகிறேன்.

நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பான்மையானவர்கள் விவசாயத்தையும், விவசாயம் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் நம்பியிருப்பதால், விவசாய முன்னேற்றத்திற்கு நதி நீர் இணைப்பினை நடைமுறைபடுத்துவது மிக முக்கியமானதாகும். மாண்புமிகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஹெச்.கபாடியா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, “நதி நீர் இணைப்பு வறட்சி பாதிப்பு மண்டலங்களில் வசிக்கும் மக்களை பசியிலிருந்து காப்பாற்றவும், வெள்ளப் பெருக்கெடுக்கும் பகுதிகளை சார்ந்த மக்களை அழிவில் இருந்து பாதுகாக்கவும் உதவும்” என்று “2012 நதி நீர் இணைப்பு தீர்ப்பில்” சுட்டிக்காட்டியிருக்கிறார்.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தீர்ப்பில், நதி நீர் இணைப்பு திட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட அந்த வெள்ளிக்கோடுகள் போன்ற முக்கிய வரிகளில் நதி நீர் இணைப்புத் திட்டத்தின் முழு அவசியமும் பிரதிபலிக்கிறது.

தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நதி நீர் இணைப்புத் திட்டம் பற்றிய தீர்ப்பில், இந்த திட்டத்தை நிறைவேற்ற 16 கட்டளைகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ளது. நாட்டின் கனவு திட்டமான நதி நீர் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற மாநிலங்களின் பங்களிப்புடன் அமைக்கப்பட வேண்டிய “சிறப்பு குழு” பற்றியெல்லாம் விளக்கமாக அந்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது.  அதனையொட்டி, தங்களுடைய தலைமையிலான ஆற்றல் மிகு அரசு 16.07.2014 அன்று சிறப்புக்குழு அமைத்து, கடைசியாக 02.02.2016 அன்று நடைபெற்ற கூட்டத்துடன் இதுவரை 8 கூட்டங்களை நதி நீர் இணைப்புத் திட்டங்கள் குறித்து கூட்டி விவாதித்திருப்பது சற்று ஆறுதலாக இருக்கிறது.

ஆனால், நதிநீர் இணைப்பு திட்டங்களுக்கு அதிமுக்கியத்துவம் அளிப்பதோடு,  மாநிலத்திற்குள் பாயும் நதிகளை இணைக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் தமிழக நதி நீர் இணைப்புத் திட்டங்களை அதிவேகமாக நிறைவேற்றப்பட வேண்டிய தேவை எழுந்திருக்கிறது.  

மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை இணைப்பதோடு, மாநிலங்களுக்குள்  பாயும் நதிகளை இணைக்கும் திட்டங்களையும் நிறைவேற்ற தாங்கள் உடனடியாக தலையிட வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதற்காகவே இந்த கடிதத்தை தங்களுக்கு எழுதியுள்ளேன்.

நதி நீர் இணைப்புத் திட்டம் தேசத்துக்கான, தேசத்தால் செயல்படுத்தப்பட வேண்டிய தேசிய திட்டம். இதனால் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் இருக்கக்கூடிய விவசாயிகளுக்கும், பல்வேறு தரப்பினருக்கும் மிகுந்த பயனளிப்பதாக இத்திட்டம் அமையும். உன்னதமான இந்த திட்டத்தை நிறைவேற்றுவன் மூலம், மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பிரச்னைகள் தீர்வதோடு, அண்டை மாநிலங்களுக்கு இடையில் அமைதி நிலவி, தேசிய ஒருமைப்பாட்டினை மேலும் வலுவாக்கவும், தேசிய வளர்ச்சி மற்றும் தேசிய பொருளாதாரம் மேம்படவும் மிகச்சிறந்த வாய்ப்பாக அமையும் என்பதால் நதி நீர் இணைப்புத் திட்டங்களில் மாண்புமிகு பிரதமர் உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com