முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களின் பூர்வீக நிலப்பரப்பு அபகரிக்கப்பட்டு அவற்றில் சிங்கள, முஸ்லிம் மக்களைக் குடியேற்ற எடுக்கப்படும் நடவடிக்கைகளை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்படி கேட்டு பொதுநல வழக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எதிராளிகளாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ, ஜனாதிபதிச் செயலணியின் செயலர் திவாரத்தின ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
நேற்று (29.03.2013) தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 1 திகதி உயர்நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
வன்னியைச் சேர்ந்தவரும் சேதுருவில பிரதேச சபை உறுப்பினருமான கதிர்காமு சிவலோகேஸ்ரவன் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார். பசுமையான இடங்களை அழித்து தமிழ் மக்களது பூர்வீக நிலங்களைக் கையகப்படுத்தி, சிங்கள, முஸ்லிம் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.