மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

தமிழக மீனவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து, விசைப்படகுகளை பறிமுதல் செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்து, அவர்களது 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்து சென்றனர். இது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்வதும், விசைப்படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கிறது. இதனால் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழில் பாதிக்கப்பட்டு, வருவாய் ஈட்ட முடியாமல், மீனவக்குடும்பங்கள் பொருளாதார ரீதியாக மிகுந்த சிரமத்தில் இருக்கிறார்கள்.இது போன்ற சூழலில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக இருக்கிறது. இந்நிலை மாறவும், தமிழக மீனவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கவும் மத்திய மாநில அரசுகள் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டும்.

குறிப்பாக மத்திய அரசு இலங்கை அரசோடு பேசி கைது செய்யப்பட்டுள்ள ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்களையும், அவர்களது 2 விசைப்படகுகளையும் மீட்க வேண்டும். இலங்கை கடற்படையினரின் இது போன்ற அத்துமீறிய நடவடடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அரசின் செயல்பாடுகள் அமைய வேண்டும்.

தமிழக அரசும் தமிழக மீனவர்களின் மீன்பிடித்தொழிலுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். எனவே மத்திய மாநில அரசுகள் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க தொடர் முயற்சிகளை மேற்கொண்டு மீனவக்குடும்பங்களுக்கு நம்பிக்கை கொடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி‌.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply