சீர்காழியில் பெய்த வரலாறு காணாத மழையில் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் , இறால் பண்ணை உரிமையாளர்கள் , பொது மக்கள் ஆகியோருக்கு தமிழக அரசு , இழப்பீடு வழங்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறிப்பாக சீர்காழியில் நேற்று பெய்த வரலாறு காணாத மழையால் மழை நீர் தேங்கியிருப்பதாலும் , விவசாய நிலங்களும் , இறால் பண்ணைகளும் மழைநீரில் மூழ்கியதாலும் விவசாயிகளும் , இறால் பண்ணை தொழிலாளர்களும் , பொது மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .

பெருமளவு குறிப்பாக சீர்காழியில் நேற்று 43 செ.மீ அளவுக்கு மழை பெய்ததால் கதிராமங்கலம் கிராமம் உள்ளிட்ட அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர்கள் அனைத்தும் மழை நீரில் மூழ்கியுள்ளது . இதனால் விவசாயிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர் . பயிரிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதால் அதற்குரிய இழப்பீட்டை முழுமையாக வழங்க விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர் .

மேலும் சீர்காழி அருகே திருநகரி பகுதியில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இறால் வளர்ப்பு பண்ணைகள் மழை நீரில் மூழ்கியுள்ளது . இறால் பண்ணையில் உடைப்பு ஏற்பட்டதால் சுமார் ஆயிரக்கணக்கான இறால்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன .

இதனால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இறால் வளர்ப்பு பண்ணை உரிமையாளர்களும் , தொழிலாளர்களும் தெரிவிக்கின்றனர் . இறால் வளர்க்கும் பண்ணையில் ஏற்பட்ட உடைப்பை தொழிலாளர்களே சரி செய்து வருகின்றனர் . இறால் பண்ணை மழை நீரில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள இழப்பீட்டுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும் என்று இறால் பண்ணை தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கின்றனர் .

குறிப்பாக சீர்காழியில் பெய்திருக்கும் கனமழையால் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் தண்ணீர் குலம் போல தேங்கியிருப்பதாலும் , வீடுகளில் தண்ணீர் புகுந்ததாலும் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது . இந்நிலையில் பொது மக்கள் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றி போக்குவரத்துக்கு உதவிட கேட்டுக்கொள்கின்றனர் .

எனவே தமிழக அரசு , மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் , இறால் பண்ணை தொழிலாளர்கள் , பொது மக்கள் ஆகியோரின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று த.மா.கா சார்பில் வலியுறுத்துகிறேன் .

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா

Leave a Reply