மைசூரு – புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் & காசி பாரத் கௌரவ் ரயில்களை பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

மைசூரு மற்றும் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் இடையேயான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இன்று கேஎஸ்ஆர் பெங்களூரு ரயில் நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது நாட்டில் தொடங்கப்பட்ட ஐந்தாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பதுடன் தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயிலாகும். பெங்களூரு கேஎஸ்ஆர் ரயில் நிலையத்தில் பாரத் கௌரவ் காசி தர்ஷன் ரயிலையும் பிரதமர் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

‘மேக் இன் இந்தியா’ வெற்றிக்கு  ஒரு சிறந்த உதாரணமாக, இந்திய ரயில்வே இந்தியாவின் முதல் உள்நாட்டு அதிவேக ரயில்- வந்தே பாரத் எக்ஸ்பிரஸை அறிமுகப்படுத்தியது, இது  கான்பூர்- அலகாபாத்-வாரணாசி வழித்தடத்தில் பிரதமரால் பிப்ரவரி 15, 2019 அன்று புது தில்லியில் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. மேலும், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் புது தில்லி- மாதா வைஷ்ணோ தேவி கத்ரா, காந்திநகர் – அகமதாபாத் – மும்பை சென்ட்ரல், மற்றும் ஆம்ப் ஆண்டௌரா – புது தில்லி வழித்தடங்களில் தொடங்கப்பட்டுள்ளன.

இந்த புதிய ரயில், தொழில்துறை மையமான சென்னைக்கும், தொழில்நுட்ப-மென்பொருள்-தொடக்க மையமான பெங்களூரு மற்றும் உலகப் புகழ்பெற்ற சுற்றுலா நகரமான மைசூருவுக்கும் இடையிலான இணைப்பை மேம்படுத்தும். மைசூரு – பெங்களூரு – சென்னையில் பயணம் செய்யும் வழக்கமான பயணிகள் தவிர, மென்பொருள் மற்றும் வணிக வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள் இதனால் பயனடைவார்கள். இது விமான சேவை போன்ற வசதியை வழங்குவதுடன் ரயிலில் புதுமையான பயண அனுபவத்தை வழங்கும்.

மைசூரு- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் நேரம்

சென்னையிலிருந்து காலை 5.50-க்கு புறப்படும் ரயில், காட்பாடி ரயில் நிலையத்தை காலை 7.21-க்கு சென்றடையும். அங்கிருந்து 7.25-க்கு புறப்பட்டு, பெங்களூரு நகரத்தை காலை 10.20 மணிக்கு சென்றடையும். அங்கிருந்து 10.25க்கு புறப்பட்டு, மைசூருவை மதியம் 12.20 மணிக்கு அடையும்.

மறுமார்க்கத்தில், மைசூருவிலிருந்து பகல் 1.05 மணிக்கு புறப்பட்டு, சென்னையை இரவு 7.30 மணிக்கு வந்தடையும். இந்த ரயில் பெங்களூருவை 2.55 க்கும், காட்பாடியை மாலை 5.36க்கும் வந்தடையும். இந்த ரயில் பெங்களூரு ரயில் நிலையத்தில் 5 நிமிடங்களும், காட்பாடி நிலையத்தில் 4 நிமிடங்களும் நிற்கும்.

 எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நிலையத்திலிருந்து மைசூருக்கான இருக்கை ரூ.1200. உயர்வகுப்பு கட்டணம் ரூ.2295. மைசூருவில் இருந்து எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் நிலையத்திற்கு சாதாரண கட்டணம் ரூ. 1365 .உயர் வகுப்பு கட்டணம் ரூ. 2485.

 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களில் சலுகை கட்டணங்களோ, குழந்தை கட்டணமோ  அனுமதிக்கப்படாது. வயது வந்தோருக்கான முழு கட்டண டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். முன்பதிவு செய்தல், ரத்து செய்தல், பணத்தைத் திரும்பப் பெறுதல் போன்றவற்றுக்கான பிற விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சதாப்தி ரயில்களின்படி இருக்கும்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply