தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு! -சிங்கள கடற்படையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்!-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.

மீன்பிடி தடைக்காலம் முடிந்து ஒரு சில நாட்களாகத்தான் மீனவர்கள் தொழில் செய்ய ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் பாம்பன் பகுதியைச் சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் சுமார் 1500 பேர் 200-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். தொழில் செய்துவிட்டுத் திரும்புகிற நேரத்தில இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை தீவின் சிங்கள கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதோடு மீனவர்களின் படகுகளில் இருந்த வலைகளையும் அறுத்து எறிந்து ஒரு விசைப்படகு மீது துப்பாக்கிச்சூடும் நடத்தியுள்ளனர். அதில் அந்த படகு சேதமடைந்துள்ளது. ஆனால் அதில் இருந்த மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.

தமிழக மீனவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்துவது இலங்கைக் கடற்படைக்கு வாடிக்கையாகிவிட்டது. இதை இப்படியே அனுமதித்துக் கொண்டிருந்தால் இந்தியாவின் பாதுகாப்பே நாளைக்கு அச்சுறுத்தலுக்கு ஆளாகும்.

எனவே தமிழகக் காவல்துறை நமது மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்திய இலங்கைக் கடற்படையினருக்கு எதிராக உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவர்களைக் கைது செய்வதற்கும் நீதிமன்றத்தின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய அரசு இது தொடர்பாகத் தனது கடுமையான கண்டனத்தை சிங்கள இனவெறி அரசுக்கு இலங்கை தூதரின் வழியாக தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எஸ்.திவ்யா.

Leave a Reply