பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார். தற்போதைய உலகளாவிய பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதில் பிரிக்ஸ் அமைப்பின் முக்கியத்துவம் அதிகரித்து வருவதை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.
வேகமாக மாறிவரும் உலகச் சூழலில், முக்கிய பாதுகாப்பு விவகாரங்களில் ஒத்துழைப்பை தீவிரப்படுத்துவதில் பிரிக்ஸ் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார். பயங்கரவாதம், இணையப் பாதுகாப்பு மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பொதுவான சவால்களை எதிர்கொள்ள உறுப்பு நாடுகளிடையே அதிக அளவிலான கூட்டு முயற்சி தேவை என்பதை அவர் வலியுறுத்தினார்.
இந்தியா பிரிக்ஸ் அமைப்பிற்குத் தலைமை தாங்கும் இந்த ஆண்டில், உறுப்பு நாடுகளிடையே நடைமுறை ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என்று திரு. மோடி தெரிவித்தார். சர்வதேச தெற்கு நாடுகளின் முன்னுரிமைகளை முன்னெடுப்பதிலும், பாதுகாப்பான, உறுதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலகத்தை உருவாக்குவதிலும் இந்தியாவின் அர்ப்பணிப்பு தொடரும் என்று அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:
“பிரிக்ஸ் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் மற்றும் மூத்த பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.
மாறிவரும் உலகச் சூழலில், பயங்கரவாதம் மற்றும் இணையப் பாதுகாப்பு முதல் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் வரையிலான பொதுவான சவால்களை எதிர்கொள்வதிலும், பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதிலும் பிரிக்ஸ் அமைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்தியாவின் தலைமையின் கீழ், நடைமுறை ஒத்துழைப்பை மேம்படுத்தவும், வளர்ந்து வரும் நாடுகளின் முன்னுரிமைகளை ஆதரிக்கவும், பாதுகாப்பான, உறுதியான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய உலகத்தைப் படைக்கப் பங்களிக்கவும் நாங்கள் பாடுபடுவோம்.”
எம்.பிரபாகரன்
