ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் மாதத்துக்கு ரூ.7,500 வீதம் 6 மாதங்களுக்கு வழங்கிட வேண்டும்! -மத்திய அரசுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கோரிக்கை.

காங்கிரஸ் கட்சி சார்பில் ‛ஸ்பீக் அப் இந்தியா’ என்னும் பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்ட காணொளி செய்தியில் கூறியுள்ளதாவது:

கடந்த இரு மாதங்களாக ஒட்டுமொத்த தேசமும் ‘கொரோனா’ ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்து, தீவிரமான பணப் பற்றாக்குறை, நிதிப் பிரச்னையுடன் இருக்கிறார்கள். சுதந்திரத்துக்குப் பின் முதல் முறையாக, புலம்பெயர் தொழிலாளர்கள் காலில் செருப்பு இல்லாமல், பசியுடனும், தாகத்துடனும், போக்குவரத்துக்கு வழியில்லாமலும், தங்கள் சொந்த மண்ணைத் தேடி ஆயிரக்கணக்கான கி.மீ தூரம் நடப்பதைப் பார்க்கிறோம்.

அவர்களின் வலி, வேதனை, அழுகுரல் நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் இதயத்திலும் கேட்கிறது. ஆனால், மத்திய அரசுக்கு மட்டும் கேட்கவில்லை. தேசத்தில் இருக்கும் ஒவ்வொரு ஏழைக் குடும்பத்துக்கும் மாதத்துக்கு ரூ.7,500-ஐ 6 மாதங்களுக்கு வழங்கிட வேண்டும். இதில் ரூ.10 ஆயிரத்தை நேரடியாக வழங்கிட வேண்டும்.

200 நாட்களுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்தை வழங்க வேண்டும். கஜானாவைத் திறந்து தேவையுள்ள மக்களுக்கு மத்திய அரசு உதவிட வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களில் பாதுகாப்பாகச் சென்று சேர இலவசமாக வாகனங்களை, ரயில் போக்குவரத்தை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.

கோடிக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பை இழந்துவிட்டனர். தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. விவசாயிகளின் விளைச்சல்கள் விற்கப்படாமல் உள்ளன. ஒட்டுமொத்த தேசமும் துயரத்தில் இருக்கிறது. இந்தத் துயரம் அரசின் அறிவுக்கு எட்டவில்லை.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட முதல் நாளில் இருந்து காங்கிரஸ் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள், சமூக ஆர்வலர்கள், தேசத்தின் நலனில் அக்கறை உள்ளவர்கள் அனைவரும் மத்திய அரசிடம் தொடர்ந்து விவசாயிகள், புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு வர்த்தகர்கள் ஆகியோரின் காயத்தை ஆற்றுங்கள், துயரத்தைப் போக்குங்கள் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

ஆனால், மத்திய அரசு செவிமெடுத்து இதைக் கேட்க
மறுப்பது ஏனோ தெரியவில்லை.

இவ்வாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

SG

–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

Leave a Reply