இத்தாலி பயணிகள் கப்பலில் பணியாற்றிய இலங்கையை சேர்ந்த ஒருவரை, கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வந்த இலங்கை கடற்படையினர்!

சர்வதேச பயணிகள் கப்பலான MSC Magnifica என்ற இத்தாலி நாட்டு கப்பலில் பணியாற்றிய இலங்கையை சேர்ந்த ஒருவர், தன்னை மீண்டும் இலங்கைக்கு அழைத்து செல்லுமாறு “சமூக ஊடகங்கள்” மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒப்புதலின் பேரில், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் மேற்பார்வையில்அந்த இலங்கையரை பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சுமார் 2,700 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் 2020 ஜனவரி 05 ஆம் தேதி, கடல் சுற்றுப் பயணத்திற்காக இத்தாலியில் இருந்து புறப்பட்ட இந்த கப்பல், உலகளாவிய “கொரோனா வைரஸ்” தொற்று நோயால் பயணத்தை ஆஸ்திரேலியாவில் நிறுத்தியது. இந்த பயணிகள் கப்பலை வேறு எந்த நாட்டினாலும் ஏற்றுக்கொள்ளப்படாததால்,  இத்தாலி நோக்கி தன் பயணத்தை தொடங்கியது.

கப்பல் இத்தாலிக்குச் செல்லும்போது எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடும் சந்தர்ப்பத்தில், தன்னை மீண்டும் இலங்கைக்கு அழைத்து செல்லுமாறு கப்பலில் பணியாற்றிய ஒரே இலங்கையரான அனுர பண்டார ஹெரத், “சமூக ஊடகங்கள்” மூலம் வேண்டுகோள் விடுத்திருந்தார். 

இந்த வேண்டுகோளுக்கு அனுதாபம் தெரிவித்த இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அந்த நபரை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வர வேண்டும் என்று கடற்படைத் தளபதியிடம் உத்தரவிட்டார். அதன்படி நேற்று (2020 ஏப்ரல் 6) அதிகாலையில் கொழும்பு துறைமுகத்திற்கு 4.4 மைல்கள் (09 கி.மீ) தூரத்தில் அந்த கப்பலை நெருங்கிய இலங்கை கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசரநிலை பதிலளிக்கும் பிரிவினர், அந்த இலங்கையரை பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்தனர்.

மேலும், இந்த பயணிகள் கப்பலில் இதய நோயாளியாக இருந்த ரோஸ்மேரி மார்கிரெட் என்ற 75 வயதான ஜெர்மன் பெண்ணையும் கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனையடுத்து, கோவிட் 19-ஐ கட்டுபடுத்துவதற்கான ஜனாதிபதி பணிக்குழுவுக்கு தகவல் தெரிவித்து, இலங்கையரான அனுர பண்டார ஹெரத் பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கும், இதய நோயாளியாக இருந்த ஜெர்மன் நாட்டு பெண்ணை துறைமுக வளாகத்தில் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்தனர்.

உலகின் எந்தவொரு துறைமுகமும், இந்த இத்தாலி நாட்டு கப்பலை ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், கப்பலில் இருந்த ஒரே ஒரு இலங்கையரை இவ்வாறு அழைத்து வரப்பட்டதை அறிந்து, இலங்கை மக்கள் பெருமிதத்துடன் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.

 

 

One Response

  1. MANIMARAN April 8, 2020 11:47 am

Leave a Reply