வெடிக்குண்டு தாக்குதலுக்கு உள்ளான தேவாலயத்தை இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேரில் சென்று பார்வையிட்டார்!

இலங்கையில் வெடிக்குண்டு தாக்குதலுக்கு உள்ளான நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தின் நிலைமைகளை கண்டறிவதற்காக, இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நேற்று (23.04.2019) முற்பகல் தேவாலயத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

அருட் தந்தை ஸ்ரீலால் பொன்சேக்காவை நேரில் சந்தித்த இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பிரதேசத்தின் அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்காகவும் தனது ஆழ்ந்த கவலையையும், அனுதாபங்களையும் தெரிவித்தார்.

அதேபோன்று தேவாலயத்தின் புனர்நிர்மாணப் பணிகள் பற்றிக் கேட்டறிந்த மைத்ரிபால சிறிசேன, நிர்மாணப் பணிகளை மிக விரைவில் மேற்கொள்வதற்கு இலங்கை இராணுவத்திற்கு தாம் பணிப்புரை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், இவ்வாறான கொடூர செயற்பாடுகள் மீண்டும் இலங்கையில்  இடம்பெறுவதற்கு இடமளிக்கப்பட மாட்டோம் என்றும், அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இந்த துன்பியல் நிகழ்வினால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தித்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாதிப்புக்குள்ளான அனைத்து மக்களுக்கும், அதிகபட்ச நிவாரணங்களை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

அருட் தந்தை ரவீன் சந்தசிறி பெரேரா உள்ளிட்ட அருட் தந்தையர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தேவாலயத்தில் சமய கிரியைகளில் ஈடுபட்டிருந்தபோது இடம்பெற்ற குண்டுத் தாக்குதலில் பலியானவர்களுக்கு மைத்ரிபால சிறிசேன இறுதி மரியாதையையும் செலுத்தினார்.

பிரதேசத்தில் உள்ள சில வீடுகளுக்கு சென்ற மைத்ரிபால சிறிசேன,  பூதவுடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்தியதுடன், அக்குடும்ப உறவினர்களுக்கும் பிரதேசவாசிகளுக்கும் அனைத்து கிறிஸ்தவ பக்தர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்தார்.

-என்.வசந்த ராகவன்.

Leave a Reply