அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவின் விசாரணை, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி முன்னிலையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இன்று நடந்த 3-வது நாள் விசாரணையில், இவ்வழக்கில், கர்நாடக வழக்கறிஞர் பவானி சிங் சிங்கை, அரசுதரப்பு வழக்கறிஞராக ஆஜராகக் கூடாது என, தி.மு.க. பொதுச் செயலாளர் க.அன்பழகன் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அன்பழகன் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி, மேல்முறையீட்டு மனு மீதான வழக்கு விசாரணையில் தொடர்ந்து குறுக்கிட்டு வந்தால், கோர்ட்டில் நேரில் ஆஜராக நேரிடும். குறுக்கீடு தொடர்ந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்க நேரிடும்.
பவானி சிங்கை மாற்ற வேண்டுமானால் அது தொடர்பாக நீங்கள் கர்நாடக அரசிடம் முறையிடுங்கள். உங்கள் அரசியலை தமிழகத்துடன் வைத்துக்கொள்ளுங்கள்.
இது கோர்ட், யார் அன்பழகன், அவரை நேரில் வரச்சொல்லுங்கள். அரசு தரப்பு வழக்கறிஞராக உங்களை நியமிக்க வேண்டும் என நினைக்கிறீர்களா? கோர்ட்டை அரசியல் களமாக பயன்படுத்தாதீர்கள் என ஆவேசத்துடன் கூறினார்.
இந்த வழக்கில் பவானி சிங் ஆஜராவது சட்டப்படி சரியல்ல என வாதிட்ட அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் சரவணன், நீதிபதியின் கண்டிப்பை அடுத்து, அன்பழகனுக்கு 92 வயதாவதால் அவரால் நேரில் ஆஜராக முடியாது. பவானி சிங்கை மாற்றுவது தொடர்பாக கர்நாடக அரசிடம் முறையிட்டுக் கொள்கிறோம் என தெரிவித்தார்.
பவானி சிங்கிடம் விசாரணை நடத்திய நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி, அரசு வழக்கறிஞராக ஆஜராக அரசாணை உள்ளதா? என கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த பவானிசிங், இந்த வழக்கில் ஆஜராக அரசு எனக்கு உத்தரவிடவில்லை. தமிழக ஊழல் ஒழிப்புத்துறையின் உத்தரவின் பேரிலேயே நான் ஆஜரானேன் என தெரிவித்தார்.
பவானி சிங்கின் இந்த ஒப்புதலை அடுத்து, அன்பழகனின் புகாரை நீதிமன்ற பதிவுத்துறையிடம் தாக்கல் செய்யுங்கள்’’ என்று நீதிபதி சிக்கா ராசப்பா குமாரசாமி அறிவுறுத்தினார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in