தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் வேளாண் துறை அமைச்சர்கள் பங்கேற்ற காரீஃப் பயிர் சாகுபடி உத்திகள் தொடர்பான தேசிய மாநாடு.

புதுதில்லி, பூசாவில் நடைபெற்ற ‘தேசிய வேளாண் மாநாடு – கரீஃப் சாகுபடி இயக்கம் 2026’-ன் இரண்டாம் நாள் கூட்டத்தில், மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்றார். அவர், இந்திய வேளாண்மையின் முழுமையான வளர்ச்சி குறித்து மாநில வேளாண் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், விவசாயிகள் ஆகியோருடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார். வேளாண் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு, விவசாயிகளை மையமாகக் கொண்ட நடவடிக்கைகள் இப்போது தேவை என்று அவர் வலியுறுத்தினார். மாநில வேளாண் அமைச்சர்களின் வலுவான பங்கேற்பு, இந்த மாநாட்டை வேளாண் முன்னேற்றத்திற்கான ஒரு சக்திவாய்ந்த தளமாக மாற்றியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில், மத்திய வேளாண் துறை இணை அமைச்சர்கள் திரு ராம்நாத் தாக்கூர், திரு பகீரத் சௌத்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர். தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் திரு ஆர் வினோத், ஒடிசா துணை முதலமைச்சரும், வேளாண் அமைச்சருமான திரு கனக் வர்தன் சிங் தியோ, உத்தரப் பிரதேச வேளாண் அமைச்சர் திரு சூர்ய பிரதாப் ஷாஹி, குஜராத் வேளாண்மை அமைச்சர் திரு ஜிதுபாய் சவ்ஜிபாய் வகானி உட்பட பல்வேறு மாநிலங்களின் வேளாண் துறை அமைச்சர்களும் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

மாநாட்டில் உரையாற்றிய திரு சிவராஜ் சிங் சௌகான், இந்த மாநாட்டை இந்திய வேளாண் துறையின் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு என்று விவரித்தார். தேசிய நலன், விவசாயிகளின் நலன், வேளாண் மேம்பாடு ஆகியவற்றுக்காகக் கூட்டாகப் பணியாற்ற வேண்டும் என்ற உணர்வை இந்த மாநாடு பிரதிபலிப்பதாக அவர் கூறினார்.

உணவு தானிய உற்பத்தியில் இந்தியா முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியை அடைந்துள்ளது என்று திரு சௌகான் கூறினார். மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீடுகளின்படி, நாட்டின் மொத்த உணவு தானிய உற்பத்தி சுமார் 376.563 மில்லியன் டன்களை எட்டியுள்ளது எனவும், இது இதுவரை இல்லாத மிக உயர்ந்த அளவாகும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தச் சாதனைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமை, விவசாயிகளின் கடின உழைப்பு, அறிவியல் ஆராய்ச்சி, மாநிலங்களின் தீவிர ஒத்துழைப்பு ஆகியவையே காரணம் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்தச் சாதனைகள் முக்கியமானவை என்றாலும், நாடு தன் வேகத்தைக் குறைத்துக்கொள்ளக் கூடாது என்று திரு சௌகான் கூறினார். இந்தியா உணவுப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் எனவும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் விவசாயத்தை அதிக லாபகரமானதாக மாற்ற வேண்டும் என்றும் அவர் கூறினார். விவசாயிகளின் தேவைகளுக்கு ஏற்ப, வேகமான, நடைமுறைக்கு உகந்த மற்றும் தேவைக்கேற்ற ஆராய்ச்சிகளை மேற்கொள்ளுமாறு விஞ்ஞானிகளையும் அவர் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply