சமூகநீதி கணக்கெடுப்பு எனும் சாதிவாரி சர்வேயின் அவசியம் குறித்து விவாதிக்க பா.ம.க சார்பில் சென்னையில் ஜூன் 5-ஆம் தேதி அனைத்துக் கட்சி&சமூகக் கூட்டம்!
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69% இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலை முறியடிக்கவும், சமூகநீதியை மேம்படுத்தவும் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது அவசியமாகிறது. இந்த விஷயத்தில் இதுவரை போதுமான அக்கறை காட்டப்படாத நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான அரசாவது அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவிலேயே சமூகநீதியில் தலைசிறந்து விளங்கிய மாநிலம் எதுவென்றால் அது தமிழ்நாடு தான். இந்தியாவில் 100% இட ஒதுக்கீட்டை 100 ஆண்டுகளுக்கு முன் கொண்டு வந்த மாநிலம் என்ற சிறப்பு தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் உண்டு. அதனால் தான் தமிழ்நாடு சமூகநீதியின் தொட்டில் என்றழைக்கப் படுகிறது. எனினும், அண்மைக்காலங்களில் சமூகநீதிக்கான முன்னெடுப்புகளை மேற்கொள்வதில். பிற மாநிலங்களுடன் போட்டியிட தமிழக ஆட்சியாளர்கள் முயற்சிகளைக் கூட மேற்கொள்ளவில்லை. அதனால், சமூகநீதியின் தொட்டில் என்றழைக்கப்பட்ட தமிழ்நாடு இப்போது சமூகநீதியில் பின்னடைவை சந்தித்து வருகிறது.
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் 1881&ஆம் ஆண்டு முதல் 1931&ஆம் ஆண்டு வரை மொத்தம் 6 முறை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. அதில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் தான் இந்தியாவில் இன்று வரை இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், பல தருணங்களில் சுமார் 95 ஆண்டுகள் பழமையான இந்தத் தரவுகளை ஏற்க உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றங்களும் மறுத்து வருவதால், தேசிய அளவிலும், மாநில அளவிலும் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்புகள் நடத்தப்பட வேண்டும் என பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அதன்பயனாக 2027&ஆம் ஆண்டுக்கான தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி கணக்கெடுப்பாக மத்திய அரசு மேற்கொள்ளவிருக்கிறது.
தேசிய அளவில் மத்திய அரசால் மேற்கொள்ளப்படும் சாதிவாரி கணக்கெடுப்பில் சாதிவாரியான மக்கள்தொகை உள்ளிட்ட சில மேக்ரோ தரவுகள் மட்டுமே இடம் பெற்றிருக்கும். அவற்றை வைத்துக் கொண்டு மாநிலங்களில் இட ஒதுக்கீடு, வாழ்வாதார மேம்பாடு உள்ளிட்ட சமூகநீதி நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. அதனால், ஒவ்வொரு மாநிலத்தின் தேவைக்கு ஏற்ப சமூக, பொருளாதார, கல்வி கணக்கெடுப்பு மேற்கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாததாகும். இந்தக் கணக்கெடுப்பு தான் சாதிவாரி சர்வே என்றழைக்கப்படுகிறது.
இந்தியாவில் பிகார், தெலுங்கானா, ஒதிஷா ஆகிய மாநிலங்கள் இத்தகைய சர்வேயை நடத்தியுள்ளன. கர்நாடகம் கடந்த பத்தாண்டுகளில் இரு முறை சாதிவாரி சர்வேயை நடத்தியிருக்கிறது. பிகார், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்ட சமூகநீதி சர்வேக்களில் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் அம்மாநிலங்களில் இட ஒதுக்கீட்டின் அளவுகள் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பிற சமூகநீதி நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று, முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையில், புதிய அரசு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இப்போதாவது தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. 2026&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி த.வெ.க. சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் முதல் வாக்குறுதியாக, ‘‘ஒவ்வொரு சமூகத்திற்கும் உரிய அளவில் விகிதாச்சார பிரதிநிதித்துவம் கிடைப்பதே உண்மையான சமூகநீதி என்பது த.வெ.க.வின் கொள்கை. இதை உறுதி செய்ய சாதிவாரி சர்வே மேற்கொள்ளப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளதால் இந்தக் கடமையை த.வெ.க. அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.
தமிழ்நாட்டில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை. மாநிலங்களுக்கு சாதிவாரி சர்வே நடத்த அனைத்து அதிகாரங்களும் உண்டு என்று பிகார், கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் உயர்நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்கியுள்ளன. உச்சநீதிமன்றமும் அதை வழிமொழிந்திருக்கிறது. சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கான பிற தேவைகளான மனிதவளம், நிதி ஒதுக்கீடு ஆகியவை தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு சிக்கலே கிடையாது.
எனவே, தமிழக சட்டப்பேரவையில் விரைவில் நடைபெறவுள்ள ஆளுனர் உரையில் தமிழகத்தில் சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட வேண்டும். அதைத் தொடர்ந்து சாதிவாரி சர்வே நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை செய்து, அடுத்த இரு மாதங்களில் கணக்கெடுப்பு தொடங்கப்பட வேண்டும். 69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாப்பதற்காக சமூகநீதி சர்வே எனப்படும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டிய தேவை குறித்து விவாதிக்கவும், அரசுக்கு வலியுறுத்தவும் தமிழ்நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்புகளின் கலந்தாய்வுக் கூட்டத்தை ஜூன் 5&ஆம் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சி நடத்துகிறது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான அழைப்பு அனைத்துக் கட்சிகள் & சமூக அமைப்புகளின் தலைவர்களுக்கு தனித்தனியாக விடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு மருத்துவர் அன்புமணி தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எஸ்.திவ்யா
