கனடாவில் மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தை மே 28, 2026 அன்று, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் நிறைவு செய்தார். டொராண்டோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், கல்வி, புத்தாக்கம், அரசு, வர்த்தகக் குழுக்கள், நிறுவன முதலீட்டாளர்கள், இந்தியப் புலம்பெயர் சமூகம் ஆகியோரை உள்ளடக்கிய பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த பேச்சு வார்த்தைகள், இந்தியா-கனடா நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பிற்கு உத்வேகம் அளிப்பதுடன், முதலீடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, நீண்டகாலக் கூட்டு நடவடிக்கைகள் போன்ற அம்சங்களில், உலக நாடுகளுக்கு உகந்த இடமாக இந்தியா உருவெடுத்துள்ளதையும் எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளன.
சர்வதேச நாடுகளுடனான உறவுகள், பொதுக் கொள்கை ஆய்வில், உலகின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான, டொராண்டோ பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற மங்க் ஸ்கூல் ஆஃப் குளோபல் அஃபயர்ஸ் அண்ட் பப்ளிக் பாலிசியில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியா விரைவான பொருளாதார முன்னேற்றம், மாற்றத்திற்கான சீர்திருத்த நடவடிக்கைகள், வளர்ந்து வரும் உலகளவிலான தலைமைத்துவம் குறித்து திரு கோயல் உரையாற்றினார். இந்தியா- கனடா இடையே, இருதரப்பு வர்த்தகம், முதலீடு, மக்கள் தொடர்புகளை வலுப்படுத்த, கல்வி, தொழில் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடையே ஏராளமான சாத்தியக் கூறுகள் உள்ளதாக அவர் எடுத்துரைத்தார்.
திவாஹர்
