இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் உள்ள விவசாயிகள், மீனவர்கள், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், சிறு தொழில்கள், கண்டுபிடிப்பாளர்கள், புத்தொழில் நிறுவனங்கள், பெண் தொழில்முனைவோர், உற்பத்தியாளர்கள், சேவை வழங்குநர்கள் என பல்வேறு பிரிவினருக்கும் மிகப்பெரிய வாய்ப்புகளைத் வழங்குகிறது என்று மத்திய வர்த்தக, தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். மும்பையில் இன்று (04.09.2026) நடைபெற்ற, இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் குறித்த இந்தியா-பெல்ஜியம் உயர் நிலைப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இந்த பேச்சுவார்த்தையில், பெல்ஜியம் பிரதமர் திரு பார்ட் டி வேவர், மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு பியூஷ் கோயல், இரு தரப்பிலும் உள்ள முக்கியத் துறைகளைப் பாதுகாக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், 200 கோடி மக்களை ஒன்றிணைக்கிறது என்றும், இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கால் பங்கையும், உலக வர்த்தகத்தில் மூன்றில் ஒரு பங்கையும், 24 டிரில்லியன் அமெரிக்க டாலர் சந்தையையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்றும் அவர் கூறினார். ஐரோப்பிய யூனியனின் 27 நாடுகளும் இதற்கு ஆதரவளித்து, இந்த ஒப்பந்தத்தை விரைவில் நடைமுறைக்குக் கொண்டுவர விரும்புவதாகவும் அவர் கூறினார். ஐரோப்பிய சூழலில் இத்தகைய ஒருமித்த ஆதரவு அரிதானது என்று அவர் குறிப்பிட்டார். இதேபோல், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பிரிவினரும் இந்தியா-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முழு மனதுடன் ஆதரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
பெல்ஜியம் பிரதமர் திரு பார்ட் டி வேவர், பேசுகையில், இந்திய-ஐரோப்பிய யூனியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தமானது, வர்த்தகத்தை வலுப்படுத்தி, நிறுவனங்கள், இளம் திறமையாளர்கள், முதலீடுகளுக்கு வாய்ப்புகளைத் திறக்கும் என்று கூறினார்.
திவாஹர்
