தரமான கல்வி, ஆராய்ச்சிக்கான உலகளாவிய இடமாக இந்தியா உருவாகி வருகிறது: குடியரசு துணைத்தலைவர் சி பி ராதாகிருஷ்ணன்.

குடியரசு துணைத்தலைவரும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான திரு சி பி ராதாகிருஷ்ணன், இன்று (04.09.2026) சண்டிகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில், அதிநவீன பகுப்பாய்வுக் கருவி வசதியைத் திறந்து வைத்தார். மேலும், அவர் பஞ்சாப் பல்கலைக்கழக தொழில்நுட்பப் புத்தாக்க மன்றத்தையும் தொடங்கி வைத்தார்.  நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு சி பி ராதாகிருஷ்ணன், 1882-ல் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பாரம்பரியத்தை நினைவு கூர்ந்தார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், இந்தியாவின் உயர்கல்வி, அறிவியல் ஆராய்ச்சிச் சூழலமைப்பு சிறந்த மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளது என்று அவர் கூறினார். தரமான கல்வி, ஆராய்ச்சி, புத்தாக்கத்திற்கான உலகளாவிய மையமாக இந்தியா வளர்ந்து வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இன்று நடைபெற்ற திறப்பு நிகழ்ச்சிகளை இரண்டு முக்கிய மைல்கற்கள் என விவரித்த திரு சி பி ராதாகிருஷ்ணன், மேம்பட்ட அறிவியல் கருவிகள் நிறுவப்பட்டிருப்பது இந்தப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித் திறன்களை கணிசமாக வலுப்படுத்தும் என்று கூறினார். கல்வித்துறை, தொழில்துறை, தொழில் காப்பகங்கள், முதலீட்டாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்படும்போது புதுமைக் கண்டுபிடிப்புகள் மேம்படும் என்றும் குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

Leave a Reply