பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சருடன் புதுதில்லியில் நாளை இருதரப்புப் பேச்சு நடத்துகிறார்.

பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் திரு ஷின்ஜிரோ கொய்சூமியுடன் 2026 ஆகஸ்ட் 20 அன்று புதுதில்லியில் இருதரப்புப் பேச்சு நடத்தவுள்ளார்.  இச்சந்திப்பு இருதரப்புப் பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதுடன் நம்பிக்கை, ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்தி இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை மேம்படுத்தவும், புதிய துறைகளில் ஒத்துழைப்பைக் கண்டறியவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாதுகாப்பு உபகரணம் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கான மூன்று கொள்கைகளை ஜப்பான் திருத்தி அமைத்ததைத் தொடர்ந்து மேக் இன் இந்தியா கட்டமைப்பின் கீழ், வலுவான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்பு உபகரணம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து இருநாட்டு அமைச்சர்களும் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள உள்ளனர். இச்சந்திப்பு இருதரப்பு ராணுவம், பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவதற்கான வழிவகைகளை அமைக்க வாய்ப்பளிக்கிறது.

முதன்முறையாக இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சர் திரு ஷின்ஜிரோ கொய்சூமி 2026 ஆகஸ்ட் 19 அன்று மும்பையில் உள்ள மேற்கு கடற்படை தளத்திற்குச் சென்று  கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதனுடன் விவாதிக்கவுள்ளார்.

Leave a Reply