போலியான தரவுகளைத் தடை செய்யும் வகையில், மருந்துகள் தொடர்பான கடும் விதிமுறைகள் !- மத்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு.

இந்தியாவின் மருந்து ஒழுங்குமுறை அமைப்பின் நம்பகத்தன்மை, வெளிப்படைத்தன்மையை வலுப்படுத்தும் வகையில்,ஒரு முக்கிய நடவடிக்கையாக, 16 அக்டோபர் 2025 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை வாயிலாக மருந்து விதிகள், 1945′-ல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் சட்டம், 1940-ன் கீழ், ஏற்கனவே உள்ள அமலாக்க விதிகளுடன் கூடுதலாக, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விதிகள், உரிமம் வழங்கும் அதிகார அமைப்புக்கு முக்கிய அதிகாரத்தை அளிக்கின்றன. அதன்படி, போலியான அல்லது புனையப்பட்ட தரவுகளுடன் கூடிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் நிறுவனங்கள் அல்லது நபர்கள், இனிவரும் காலங்களில் தடை செய்யப்படலாம். மருந்து விதிகள் 1945-ன் பல்வேறு பிரிவுகளின் கீழ் தாக்கல் செய்யப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்கும் இது பொருந்தும்.

தற்போது, புனையப்பட்ட தரவுகளைச் சமர்ப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், விண்ணப்பம் நிராகரிக்கப்படுதல் அல்லது ஏற்கனவே உள்ள உரிமங்கள் ரத்து செய்யப்படுதல் போன்ற நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்தத் திருத்தத்தின் மூலம், அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தொடர்புடைய ஒழுங்குமுறை ஆணையத்திடம் (மாநிலம் அல்லது மத்திய அரசு) புதிய விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதிலிருந்து தடை செய்யப்படுவர். இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன், விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்குவதன் மூலம், முறையான நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் மேல்முறையீடு செய்வதற்கான ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply