இந்திய விமானப்படை தனது ‘இரவுநேரப் பயிற்சி 2026-ஐ’ டார்வினில் உள்ள ராயல் ஆஸ்திரேலிய விமானப்படை தளத்தில் நாளை (20.07.2026) தொடங்குகிறது. ராயல் ஆஸ்திரேலிய விமானப்படையுடன் 2026, ஆகஸ்ட் 07 நடைபெறவுள்ள இந்தப் பயிற்சி, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் முதன்மையான பன்னாட்டு வான்வழிப் போர் பயிற்சியாகும். வடக்கு ஆஸ்திரேலியாவின் பரந்துபட்ட, மக்கள் வசிக்காத பகுதிகளில் இரவு நேரப் பறத்தலுக்கு முக்கியத்துவம் அளிப்பதால், இந்தப் பயிற்சிக்கு பிட்ச் பிளாக் என்ற பெயர் வந்தது. இந்தப் பயிற்சியின் 45 ஆண்டுகால வரலாற்றில், இந்த முறை பெருமளவிலான படைகள் பங்கேற்கவுள்ளன.
இந்திய விமானப்படைப் பிரிவில் விமானிகள், பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கட்டுப்பாட்டாளர்கள், துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட உயர் திறன்கொண்ட விமான வீரர்கள் உள்ளனர். இந்தக் குழு, வானிலிருந்து எரிபொருள் நிரப்பும் சி-17 குளோப்மாஸ்டர்-III மற்றும் ஐஎல்-78 விமானங்களின் ஆதரவுடன் போர் சார்ந்த பணிகளில் ரஃபேல் பல்திறன் போர் விமானத்தை இயக்கும். பங்கேற்கும் படைகளுக்கு ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், படை ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், உலகளாவிய சூழல்களில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு சிறந்த செயல்பாட்டு நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளவும் மதிப்புமிக்க வாய்ப்பை இந்தப் பயிற்சி வழங்கும்.
இந்திய விமானப்படை இதற்கு முன்னர் 2018, 2022 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நடைபெற்ற பயிற்சிகளில் பங்கேற்று, பாதுகாப்பு ஒத்துழைப்பிலும் பிராந்திய பாதுகாப்பை வலுப்படுத்துவதிலும் தனது உறுதிப்பாட்டை வலியுறுத்தியுள்ளது.
திவாஹர்
