இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களுக்கு நஷ்ட ஈடு பெற்றுத்தர வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.

நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விசைப்படகுகளுடன் கைது செய்து சென்றது கண்டிக்கத்தக்கது.

நேற்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 21 பேர் 4 விசைப்படகுகளில் நெடுந்தீவு கடற்பரப்பு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 21 பேரை அவர்களது விசைப்படகுகளுடன் சிறைப்பிடித்துச் சென்றதால் தமிழக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

மேலும் நாகை மாவட்ட வெள்ளப்பள்ளம் மற்றும் புஷ்பவனம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர்கள் நேற்று முன் தினம் கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் மீன்பிடி வலைகளை துண்டித்து எடுத்துச் சென்றனர்.

தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், மீன்பிடிச்சாதனங்களை சேதப்படுத்துவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்வதும் வாடிக்கையாகிவிட்டது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு, வருமானம் ஈட்ட முடியாமல் சிரமப்படுகின்றனர்.

எனவே மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், விசைப்படகுகளையும் மீட்கவும், இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் மீன்பிடி வலைகளை துண்டித்ததற்கு நஷ்ட ஈடு பெற்றுத்தரவும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

இனிமேல் தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கைகள் தொடரக்கூடாது என்பதை மத்திய அரசு இலங்கை அரசுக்கு கண்டிப்போடு தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக மத்திய அரசும், மாநில அரசும் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலைப் பாதுகாக்கும் விதமாக ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்பிடித் தொழிலைப் பாதுகாத்து மீனவக்குடும்பங்களுக்கு உதவிக்கரமாக செயல்பட வேண்டும் என்று மத்திய மாநில அரசுகளை தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply