சென்னை லயோலா கல்லூரியின் பேராசிரியரும், சேசு சபை பாதிரியாருமான ராஜநாயகம் தலைமையிலான மாணவர் குழுக்கள் ‘மக்கள் ஆய்வகம்’ என்ற அமைப்பின் சார்பில் பல்வேறு விஷயங்களைப் பற்றி தொடர்ந்து கருத்துக் கணிப்பு நடத்தி, ஆய்வு அறிக்கைகளை அவ்வப்போது வெளியிட்டு வருவது வழக்கம்.
ஆனாலும், அவர்களின் தேர்தல் கருத்துக் கணிப்புதான் பெரிய அளவில் பேசப்படும். சில நேரங்களில் பல்வேறு சர்ச்சைகளையும் உருவாக்கும்.
பேராசிரியர் ராஜநாயகம் திமுக தலைவர் மு.கருணாநிதியின் ஆதரவாளர் என்ற பகிரங்கமான விமர்சனங்களும், பல்வேறு குற்றச்சாட்டுகளும் பலமுறை எழுந்துள்ளது. அதைப்பற்றியெல்லாம் பேராசிரியர் ராஜநாயகம் காதில் போட்டுக் கொள்வதும் கிடையாது, அப்படிப்பட்ட விமர்சனங்களைப் பற்றி அவர் கண்டு கொள்வதும் கிடையாது.
இந்நிலையில், பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான மாணவர் குழுக்கள், கடந்த (2015) ஆண்டு ஆகஸ்ட் மாதம் கருத்து கணிப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்றும், ஜெ.ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார் என்றும் தெரிவித்து இருந்தார்கள்.
மேலும், தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர்களாக ஸ்டாலினும், கருணாநிதியும் முன்னிறுத்தப்பட்டதில், கருணாநிதி 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார் என்றும், அந்த கருத்து கணிப்பில் குறிப்பிட்டு இருந்தார்கள்.
இதனால் விரக்தியடைந்த திமுக தலைமை, இதை முறியடிப்பதற்காக, லயோலா கல்லூரியின் பெயரைப் பயன்படுத்தி ஒரு போலியான மோசடி கருத்து கணிப்பு குழுவை ‘பண்பாட்டு மக்கள் தொடர்பகம்’ என்ற பெயரில் உருவாக்கி, தி.மு.க.விற்கு ஆதரவாக கருத்துக்கணிப்பு முடிவுகளை 04.01.2016 அன்று வெளியிட வைத்து உள்ளனர்.
இதை அறிந்த லயோலா கல்லூரி நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த போலியானக் குழுக்களுக்கும், லயோலா கல்லூரியின் நிர்வாகத்திற்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் இன்னாள், முன்னாள் மாணவர்கள் அமைப்பிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று, லயோலா கல்லூரியின் முதல்வரும், சேசு சபை பாதிரியாருமான முனைவர் ஞா.ஜோசப் அண்டனி சாமி விளக்கம் அளித்துள்ளார்.
தேர்தல் முடிவதற்குள் இன்னும் என்ன, என்ன தில்லு முல்லுகள் அரங்கேறுமோ? அந்த திமுக தலைமைக்கே வெளிச்சம்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com
