பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதாதளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னாள் முதல்வர் நிதிஷ்குமாருக்கும், முதல்வர் ஜிதன்ராம் மஞ்சிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அவரை முதல்–மந்திரி பதவியில் இருந்து நீக்க நிதிஷ்குமார் ஆதரவாளர்கள் மறைமுகமாக முயற்சித்தனர்.
இந்த பிரச்சினையில் கட்சியின் தேசிய தலைவர் சரத்யாதவ், நிதிஷ்குமாருக்கு ஆதரவாக இருந்ததால், மஞ்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
புதிய முதல்–மந்திரியாக நிதிஷ்குமாரை தேர்ந்து எடுக்க தீர்மானித்த ஐக்கிய ஜனதாதள மேலிடம், முதல்–மந்திரி பதவியை விட்டு விலகுமாறு மஞ்சியை கேட்டுக் கொண்டது.
ஆனால், மேலிட கட்டளையை ஏற்க மறுத்த அவர், மந்திரிசபையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, சட்டசபையை கலைக்குமாறு கவர்னர் கேசரிநாத் திரிபாதிக்கு சிபாரிசு செய்தார்.
இதனையடுத்து நிதீஷ்குமார் ஆதரவாளர் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில், சட்டசபை தலைவராக நிதீஷ் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், டெல்லியில் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதல்-மந்திரி ஜிதன்ராம் மஞ்சி கலந்து கொண்டார். பின்னர் மாலையில் அவர் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது இருவரும் பீகார் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகும் எண்ணம் எதுவும் என்னிடம் இல்லை. ஏனென்றால், எனக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. அதை சட்டசபையில் வருகிற 20-ந் தேதி நிருபிப்பேன்.
ஒருவேளை சட்டசபையில் என்னால் பலத்தை நிரூபிக்க முடியவில்லை என்றால் மட்டுமே முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுவேன். என்று கூறினார்.
இந்நிலையில் பீகார் மாநில முதல்-மந்திரி ஜிதன்ராம் மஞ்சி, ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. தியாகி கூறியுள்ளார்.
கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக ஜிதன்ராம் மஞ்சி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஐக்கிய ஜனதாதள கட்சி சார்பிலான 130 எம்.எல்.ஏ.,க்களுடன் நிதீஷ்குமார் கவர்னர் கேசரிநாத் திரிபாதி வீட்டில் ஆஜரானார். எங்களுக்கு இருக்கும் பலத்தை பாருங்கள் எங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுங்கள் என உரிமை கோரியுள்ளார்.
இவருக்கு கம்யூனிஸ்ட் உள்பட பல்வேறு கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
-எஸ்.சதிஸ் சர்மா.
