பிரான்ஸ் நாட்டின் எவியான் நகரில் ஜி7 உச்சிமாநாட்டிற்கு இடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் திரு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானை, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று சந்தித்து பேசினார். இருதலைவர்களுக்கு இடையே 2026-ம் ஆண்டு 3-வது முறையாக நடைபெற்றுள்ள இந்த சந்திப்பு, இந்தியா – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே வலுவான, துடிப்புமிக்க விரிவான உத்திசார் கூட்டாண்மையை பிரதிபலிக்கிறது.
2026 ஜனவரி மாதத்தில் அதிபர் திரு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யான் மேற்கொண்ட இந்திய பயணம், 2026 மே மாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணம் மூலம் தொழில்நுட்பம், வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், நேர்மறையான வளர்ச்சிகள் குறித்து இருதலைவர்களும் ஆய்வு செய்தனர். அத்துடன் பரஸ்பரம் நலன் சார்ந்த பிராந்திய உலகளாவிய வளர்ச்சிகள் குறித்தும் இருதலைவர்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
மேற்காசியப் பிராந்தியத்தில் நீடித்த அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதில் உரையாடல், தூதரக நடவடிக்கை, சர்வதேச சட்டம், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றை மதித்தலின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக தடையற்ற, பாதுகாப்பான, சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, வர்த்தகம் ஆகியவை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று இருதரப்பிலும் வலியுறுத்தப்பட்டது.
நடப்பாண்டு இறுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பங்கேற்குமாறு அதிபர் திரு ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானுக்குப் பிரதமர் அழைப்பு விடுத்தார்
எஸ்.சதிஸ் சர்மா
