1947 போரின் வெற்றியை உறுதி செய்து இந்திய ராணுவ விமானம் தரையிறங்கியதன் 75-வது ஆண்டினை நினைவுகூர ஸ்ரீநகரில் நடைபெற்ற வீரதீர தின கொண்டாட்டங்களில் பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்றார்.

இந்திய சுதந்திரத்தின் வெற்றியை உறுதி செய்த இந்திய ராணுவம் 1947-ல் பட்காம் விமான நிலையத்தில் போர் விமானம் தரையிறங்கியதன் 75-வது ஆண்டினை நினைவுகூர ஸ்ரீநகரில் 2022 அக்டோபர் 27 அன்று நடைபெற்ற  வீரதீர தின கொண்டாட்டங்களில் பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.  ஜம்மு காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கான உடன்பாடு மகராஜா ஹரிசிங், இந்தியக் குடியரசு இடையே கையெழுத்தான அடுத்த நாள் ஜம்மு காஷ்மீரிலிருந்து பாகிஸ்தான் படைகளை வெளியேற்ற 1947 அக்டோபர் 27 அன்று, பட்காம் விமான நிலையத்தில் இந்திய விமானப்படை  மூலம் இந்திய ராணுவம் தரையிறக்கப்பட்டது.  இதையடுத்து அக்டோபர் 27 காலாட்படை தினமாக கொண்டாடப்படுகிறது. இன்றைய நிகழ்ச்சி சுதந்திர இந்தியாவின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாக்க தங்களின் இன்னுயிரை ஈந்த ராணுவ வீரர்களுக்கும், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கும் பாதுகாப்பு அமைச்சர் தமது உரையில் புகழாரம் சூட்டினார்.  இவர்களின் வீரம் மற்றும் தியாகம் காரணமாகவே, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தற்போது நீடிக்கிறது என்றும் எதிர்காலத்திலும் இது தொடரும் என்றும் அவர் கூறினார். நமது ராணுவ வீரர்களின் துணிவு மற்றும் தியாகம் காரணமாக எண்ணற்ற தடைகளை தாண்டி, ஒவ்வொரு சமயத்திலும் இந்தியா உயர்வு பெறுகிறது என்றும் இவர்களால் அமைக்கப்பட்ட வலுவான  அடித்தளத்தின் மேல் இந்தியா இன்று உயர்ந்து நிற்கிறது என்றும் அவர் கூறினார்.  மகத்தான பெருமை,  ஒருபோதும் வீட்சி அடைவதில்லை  என்றும் விழுகின்ற போதெல்லாம் அது எழும் என்றம் கூறிய  பாதுகாப்பு அமைச்சர் 1947 சம்பவம்  அத்தகையதில் ஒன்று என்றார்.

முதலாவது பரம்வீர் சக்ரா விருது பெற்ற மேஜர் சோம்நாத் சர்மாவின் வீரத்தை  நினைவுகூர்ந்த திரு ராஜ்நாத் சிங், இவர் போரில் காயமடைந்த போதும், ஒரு படைப்பிரிவிற்கு தலைமை தாங்கி, எதிரியின் பிடியிலிருந்து ஸ்ரீநகர் வி்மான தளத்தை பாதுகாத்து உச்சநிலை தியாகம் செய்து தாய்நாட்டை பாதுகாக்க தங்களின் இன்னுயிரை ஈந்த பிரிகேடியர் ராஜீந்தர் சிங்,  லெப்டினன்ட் கலோனல் திவான் ரஞ்சித்ராய் போன்ற வீரச்செயல் விருதுபெற்றவர்களையும், அவர் போற்றிப் புகழ்ந்தார்.

இந்தப் போரின் போது விமானியாக இருந்து படைகள் செல்வதற்கு மதிப்புமிகு பங்களிப்பு செய்த ஒடிசாவின் முன்னாள் முதலமைச்சர் பிஜூ பட்நாயக்கையும்,  பாதுகாப்பு அமைச்சர் நினைவு கூர்ந்தார். எதிரிகளை  பின்வாங்கச் செய்வதற்கும் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதற்கும் உதவிய ஜம்மு காஷ்மீர் மக்களின் முக்கியமான பங்களிப்பை அவர்  பாராட்டினார்.

திரு நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்து 370-வது பிரிவு நீக்கப்பட்டதற்கு முன் பல தசாப்தங்களாக ஜம்மு காஷ்மீர் மக்கள் வளர்ச்சியும், அமைதியும், இல்லாதவர்களாக  இருந்தனர் என்று குறிப்பிட்ட பாதுகாப்பு அமைச்சர், 370-வது பிரிவு நீக்கப்பட்ட பின் இந்த யூனியன் பிரதேசத்தில் அமைதி மற்றும் வளர்ச்சியின் புதிய சகாப்தம் தொடங்கியது என்றார்.  ஏற்கனவே, இந்திய எதிர்ப்பு சக்திகள் சில, மதத்தின் பெயரால் அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் இடையூறாக இருந்தன, ஆனால், தற்போது மத்திய அரசு மற்றும் ராணுவத்தின் தொடர்ச்சியான முயற்சிகளால் இங்கு அமைதியும், நல்லிணக்கமும் நிலவுகிறது என்று திரு ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் மனோஜ் பாண்டே மற்றும் ராணுவ படைப்பிரிவுகளின் அதிகாரிகள், பிரமுகர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply