மாதவிடாய் பிரச்சனைகளும் அதற்கான மருந்துகளும்… – ஆயுர்வேத மருத்துவத்தின் அற்புதங்கள்

 

பெண்களுக்கு வரும் பிரச்சனைகளில் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவது மாதவிடாய் கோளாறுகள்தான். இப்பிரச்சனைகளுக்கு மருத்துவரை சந்தித்து ஆலோசனைகளுக்கு பெறுதற்கும், சிகிச்சைச் செய்து கொள்வதற்கும் பெரும்பாலான பெண்கள் வெட்கத்தின் காரணமாகவும், கூச்ச சுபாவத்தாலும் வெளியில் சொல்ல முடியாமல் பல வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.   கருப்பை, யோனி, சினைப் பைகள், கடிதமம், நிதம்பம், உதடு, மூத்திரத்தாரை, பூ நரம்பு, யோனித்துவாரம் முதலியவற்றைதான் பெண்களின் ஜன இந்திரியங்கள் என்று அழைக்கின்றோம்.

கருப்பையில் இருந்து வெளியே வரும் குழாய்க்கு யோனி என்று பெயர் வெளிப்பாகத்தில் யோனித்துவாரம் காணப்படும். யோனியில் இருக்கின்ற தசைகள் நீளவும், சுருங்கவும் திறன் படைத்தவை. யோனியின் உள் நீளம் சுமார்3 அங்குலமும், வெளி நீளம் 6 அங்குலமும் இருக்கும். நீர் தாரையின் மேல் முளைப்போன்று உறுப்பு இருக்கிறது. அதற்கு பூ நரம்பு (க்ளிடோரியஸ்) என்று அழைக்கப்படுகிறது.

கருப்பையின் மேல் பாகத்தில் பெல்லோபின் குழாய்க் போகின்றன. ஓவரிஸ் என்று சொல்லப்படும் சினைப் பை பெல்லோபின் குழாயின் முனையில் இருக்கிறது. பூ நரம்பு, யோனித்துவாரம், நீர்ப்பை, நீர்த்துவாரம் முதலிய இடங்களில் மிருதுவான மியூகஸ்மெம்ரேன்கள் என்ற தோல் உண்டு. இத்தோலுக்கு சிறு உதடுகள் என்று பெயர். இது அநேகமாக வெளியே தெரியாது. ஏனெனில் இதன் மேல் பெரிய உதடுகள் மூடிக்கொண்டிருக்கிறது. உரோமங்கள் உள்ள மேலான பாகத்திற்கு கடிதமம் எனப்பெயர்.

ஒரு பெண் ஒன்பது வயது முதல் பதினைந்து வயத்திற்குள்ளாக பருவம் அடையும் வாய்ப்பு உண்டாகிறது. கட்கத்திலும் பெண் குறியிலும் ரோமம் முளைக்கிறது. ஸ்தானங்கள் முளைத்து பருக்கின்றன. உடம்பு கிடு, கிடுவென்று வளர்கின்றது. மாதவிடாய் வந்து விடுகிறது. இதைத்தான் பூப்பு என்று சொல்கின்றோம். ஒரு சில, பெண்களுக்கு 17 வயது வரை கூட மாத போக்கு ஏற்படாமல் இருப்பதுண்டு. உடல் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் கவலைப்பட தேவையில்லை.

பெரும்பாலும் தாய் எந்த வயதில் பூப்பு அடைந்தாளோ அதே வயதில் அவருக்கு பிறந்த பெண் குழந்தைகளும் பருவம் அடைகிறார்கள் என்பதை நடைமுறையில் பார்க்க முடிகிறது. இதில் ஒரு சிலர் விதி விலக்காகவும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதில்லை.

கருப்பையும், சூற்பைகளும் சரியாக வளராத காரணத்தாலும், யோனி அடைக்கப் பட்டிருந்தாலும் மாதப்போக்கு ஏற்படாமல் இருக்க வாய்ப்பு உண்டு.

மாதவிடாய் சாதாரணமாக இருபதெட்டு தினங்களுக்கு ஒரு முறை உண்டாகி 3 நாளைக்கு இருக்கும். மாதவிடாய் காலங்களில் கருப்பையின் உட்சவ்வில் கொஞ்சம் உரிந்து போய் வெளிவரும். மாதவிடாய்ப்போக்கில் ரத்தமும், பிசின் போன்ற நாற்றமுள்ள கோழைப் பொருளும் வெளியேற்றப்படுகிறது. இது இயற்கையாகவே ஒவ்வொரு வயது வந்த பெண்ணுக்கும் உண்டாகிறது. இதைத்தான் மாதவிடாய் அல்லது மாத்திரம் என்றும் கிராமப்புற பெண்கள் மத்தியில் தீட்டு என்று சொல்லும் வழக்கமும் இருந்து வருகிறது.

மாதவிடாயின் போது முரட்டு காகிதத்தையோ, அழுக்கு துணிகளையோ வைத்து கட்டிக் கொள்ளக்கூடாது. அப்படி செய்தால் யோனித்து வாரத்திற்கு அருகில் அரிப்பு, சிவந்து போகுதல், வீக்கம் போன்றவை ஏற்பட்டு வேதனை கொடுக்கும். பொதுவாக பெண்கள் வெளி ஜனை உறுப்புகளை அடிக்கடி கழுவ வேண்டும். பெண் குறியின் உதட்டில் உள்ள மடிப்புகளை கழுவிச்சுத்தம் செய்வதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

மாதவிலக்கு ஆகத் தொடங்கிய பின்னர் சீதோஷ்ண மாற்றம் காரணமாகவும், டைய்பாய்டு, ஷயரோகம், ஜலதோசம்  போன்ற நோயுள்ள காலங்களில் மாதப்போக்கு நின்று விடக்கூடும். இதற்காக அச்சப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை.

உடல் ஆரோக்கியம் கிடைத்தவுடன் பின்னர் உரிய காலத்தில் மாதப்போக்கு ஏற்பட்டுவிடும்.

மணமான பெண்களுக்கு மாதப்போக்கு நின்று விட்டால் கருத்தரிக்க கூடும் என்பதை மறக்காமல் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வழக்கமாக மாதவிடாய் ஆகும் போது கொஞ்சம் சங்கடம் இருப்பது இயல்புதான். ஆனால் பல பெண்களுக்கு கடுமையான வயிற்று வலி, ரத்த போக்கு, தலைசுற்ற்ல், வாந்தி, நாவறட்சி, உஷ்ணம், முதுகு மற்றும் விலாப் புறங்களில் கடுமையான வலி, அடிவயிற்றில் அழுத்துவது போன்ற உணர்வு கருப்பையில் குத்தல் வலி, புலம்பல், சோர்வு ஏற்பட்டு உடம்பு வெளிறுதல் போன்ற தொந்தரவுகள் இருக்கும். இதுபோன்ற அறிகுறிகளை ஆயர்வேத மருத்துவத்தில் “அஸ்லுக்தரம்” அல்லது “ரத்தப்பிரதரம்” என்று அழைக்கிறோம்.

ஒரு சில பெண்களுக்கு உடல் சம்மந்தமான நிலைமைகள, வலிமிக்க மாதவிடாய் ஏற்படுவதற்கு காரணமாகிறது. கருப்பையின் கழுத்து சிறிதாய் உள்ள பெண்களுக்கு ரத்தத்தை வெளியே தள்ளுவதற்கு வேகம் வேண்டியிருக்கும். இதனால் சிரமம் ஏற்பட்டு வலி உண்டாகும் பிரச்சினைகள் இருக்கும் குழந்தை பிறக்கும்போது கருப்பையின் கழுத்து பெரிதாகிவிடுவதால் பின்னர் தொந்தரவுகள் இருக்காது.

மற்றும் சில பெண்களுக்கு மாதவிடாய் முன் நரம்பிலும், ரத்த ஓட்டத்திலும் குழப்பம் (மோலிமென்) ஏற்படுவதால் நரம்பு முறுக்கேறி, கணவனிடத்திலும், குழந்தைகளிடத்திலும், குடும்பத்தில் உள்ளவர்களிடமும் கண்டதை சொல்லி கண்டதை செய்து குழப்பத்தை விளைவித்து பிரச்சினையை ஏற்படுத்தி விடுவார்கள்.

பெண்கள் செய்யும் குற்றங்களில் பெரும்பாலானவை இந்த காலக் கட்டத்தில்தான் செய்யப்படுகின்றன. இதனால் மனைவியின் தவறான நடவடிக்கைக்கு அவளது கெட்ட குணம்தான் காரணம்  என்று கணவன் நினைத்து விடுவதால் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடும், சண்டை சச்சரவுகளும் உருவாகிறது. இதுபோன்று ஏற்படும் பெண்களுக்கு நரம்பு கோளாறு, சிடுசிடுப்பு, இவற்றோடு மார்பகங்களும் புண்ணாகி விடுவதோடு, வயிறு உப்பிக்கொண்டு வயிற்றில் உள்ள வாய்வு வெளியே போகாமல் சங்கடம் உண்டாகிறது.

ஒரு சில பெண்களுக்கு யோனியிலிருந்து தெரிந்தோ, விட்டு, விட்டோ வெள்ளைப்போக்கு (லிகோரியா) ஏற்படுகிறது. இதற்கு வெட்டையைத்தவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன. உடல் உஷ்ணம், பலகீனம், சிதைவுற்ற (அல்லது) நோய் தொற்றுள்ள கருப்பையின் கழுத்து, கருப்பையின் உள்ள கழுத்தில் சவ்வு போய் தொடர்ந்து வெள்ளை ஒழுக்கு ஏற்படுதல். இந்த ஒழுக்கு சாதாரணமாக தெளிந்து பாகுபோல் இருக்கும். இதனால் பெண்கள் மிகவும் வேதனை அடைகின்றனர்.

மேலும் மாதவிடாய் 45 வயது வாக்கில் நின்று விடுகிறது. அதனை சூதக ஓய்வு என்று சொல்கின்றோம். மாதவிடாய் நிற்கும் தருவாயில் எரிச்சலும், உஷ்ணமான ரத்தப்போக்கும் ஏற்படும். உடல் அளவிலும், மனதளவிலும் பெண்கள் பல வித பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

சூதக ஓய்வுக்குப்பின் ரத்த போக்கு ஏற்பட்டாலும, சூதக காலத்துடன் தொடர்பின்றி சில நாட்களுக்கு அவ்வப் போது விட்டு, விட்டு ரத்த போக்கு ஏற்பட்டாலும், கடுமையான ரத்தபோக்கு தொடர்ந்து வெளிப்பட்டாலும் இது புற்று நோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம் என்பதை பெண்கள் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாதவிடாய் பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத மருந்துகள்.

வலியுடன் கூடிய மாதவிடாய், வயிற்றுவலி, இடுப்புவலி, யோனி, சூலம், பெரும்பாடு, வெள்ளைப்படுதல், நீர் சுருக்கு ரத்த பித்தம், கருப்பாயசத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கு,

அசோகக்ருதம் காலை 10 கிராம், இரவு 10 கிராம், சதாவரிக்ருதம் காலை 10 கிராம், இரவு 10 கிராம் சூடான பாலில் சாப்பிடவும்.

ருது ஆகுவதற்கு

நெய்சட்டீவேர் 2 காசிடை,    அம்மன்பச்சரிவேர் 2 காசிடை இவற்றைக் கொண்டு வந்து வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து 7 நாட்களுக்கு கொடுக்கவும்.

ஆண் பனையின் குருத்தோலையை சுட்டு கரியாக்கி, பாலுடன் சேர்த்து அருந்தினால் அன்றே தீட்டு வெளிப்படும்.

மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலிக்கு தோல் நீக்கிய உள்ளி பூண்டு 1 பல்லு, மிளகு10, நுணாக்கொழந்து ஒரு சிறிய எலுமிச்சைங்காய் பிரமாணம் இவற்றை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து மாதவிடாய் ஆன 3-வது நாளில் குளித்து தலை துவட்டுவதற்கு முன் சாப்பிட்டால் வயிற்றுவலி தீரும்.

பத்தியம்: மருந்து சாப்பிடும் தினத்தன்று உப்பு, புளி ஆகாரத்தில் சேர்கக் கூடாது.

மேற்காணும் மருந்துகள் அனைத்தும் பொதுவான மருந்துகளே. எனவே இன்னும் ஏராளமான மருந்துகள் இருக்கின்றன. ஆயுர்வேத மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றால் பூரண சுகம் பெறலாம்.