ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி ஒற்றுமையாய் வாழ வேண்டும் : அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா ஈஸ்டர் தின வாழ்த்து!

estrereaster-dayjayalalithaa

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர்  ஜெ.ஜெயலலிதா வெளியிட்டுள்ள ஈஸ்டர் தின வாழ்த்துச் செய்தியில், கருணையின் வடிவமான இயேசுபிரான் உயிர்த் தெழுந்த தினத்தை ஈஸ்டர் திருநாளாக உலகமெங்கும் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த ஈஸ்டர் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்

“உன் மீது நீ அன்பு செலுத்துவது போல, பிறர் மீதும் அன்பு செலுத்துவாயாக” என்று மனித நேயத்தின் மாண்பினையும், அன்பு செலுத்துவதன் அவசியத்தையும் எடுத்துரைத்த இயேசுபிரான், சிலுவையில் அறையப்பட்ட பின்பு உயிர்த்தெழுந்த மூன்றாம் நாள் ஈஸ்டர் திருநாளாக கிறிஸ்துவப் பெருமக்களால் கொண்டாடப்படுகிறது.

பகைவர்களையும் இரட்சிக்கும் பரந்த மனம் கொண்ட இயேசுபிரான், தம்மை சிலுவையில் அறைந்தவர்களைப் பார்த்து, “தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள், இவர்களை மன்னியும்” என்று இறைவனிடம் வேண்டி, தனது எல்லையில்லா இரக்க குணத்தை உலகத்தார்க்கு உணர்த்தினார்.

அன்பே வாழ்வின் நெறி என்று வாழ்ந்து காட்டிய இரட்சகர் இயேசுபிரானின் போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி ஒருவர் மீது ஒருவர் அன்பு காட்டி ஒற்றுமையாய் வாழ வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை எனது ஈஸ்டர் திருநாள் நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்வாறு தமது வாழ்த்துச் செய்தியில் ஜெ.ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

-ஆர்.அருண்கேசவன்.