திருவாரூர் மாவட்டம், திருத்துறைபூண்டி வட்டம், திருக்கொள்ளிக்காடு அருள் தரும் பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா இன்று நடைபெற்றது.
காவிரி தென் கரையில் அமைந்துள்ள தளங்களில் ஒன்றானதும் திருநெல்லிக்காவல், திருத்தங்கூர், திருவண்டுதுரை ஆகிய பாடல் பெற்ற தலங்களுக்கு அருகில் திருஞான சம்பந்தர் மற்றும் திருநாவுக்கரசர் ஆகியவர்களால் பாடல் பெற்ற தலமான அருள்மிகு மிருதுபாத நாயகி சமேத அக்னீஸ்வர சுவாமி திருக்கோயிலில் சனிபெயர்ச்சி விழா நடைபெற்றது.
இரண்டரை வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சி இன்று காலை 10.01 மணியளவில் நடைபெற்றது. அப்போது சனீஸ்வர பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசித்தார்.
அதனை முன்னிட்டு, “ கோளது துயர்தீர்க்கும் கொள்ளிக்காடரே “ என புகழ்பெறும் இத்தலத்தில் கலப்பையை கையில் ஏந்தி காகத்துடன் காட்சி தருகின்ற பொங்கு சனீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்று தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி பரிகாரம் செய்து சனீஸ்வரரின் அருளைபெற்றனர்.
இந்த சனிபெயர்சியினை தொடர்ந்து 24.12.2017, 25.12.2017, 31.12.2017 மற்றும் 01.01.2018 ஆகிய தினங்களில் பொங்கு சனி பகவானுக்கு சிறப்பு பரிகார ஹோமம் மற்றும் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.
-ஜி ரவிச்சந்திரன்.
