பீகார் மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை – 22-ன். முசாஃபர்பூர்-சீதாமர்ஹி – சோன்பர்சா வழித்தடத்தை, 4-வழிச் சாலையாக மேம்படுத்தும் திட்டத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 82.578 கி.மீ நீளம் கொண்ட இத்திட்டம், மொத்தம் ரூ.3,590.73 கோடி மூலதனச் செலவில், பொது – தனியார் துறை முதலீட்டுடன் செயல்படுத்தப்படும்.
பீகாரின் விரிவடைந்து வரும் தேசிய நெடுஞ்சாலைக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள இத்திட்டம், குறிப்பிடத்தக்க பொருளாதார முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. இது இந்தியா-நேபாள எல்லைப் பகுதியில் உள்ள சோன்பர்சாவையும், தேசிய நெடுஞ்சாலை-27-ல் (கிழக்கு-மேற்கு வழித்தடம்) உள்ள முசாஃபர்பூர் போன்ற பொருளாதார மையங்களையும் இணைக்கும் ஒரு முக்கியப் பாதையாக அமையும். முசாஃபர்பூர், முக்ஸுத்பூர், ருன்னி சையத்பூர், தும்மா, டும்ரா, புதாஹி, சோன்பர்சா போன்ற அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில், போக்குவரத்து நெரிசலை இத்திட்டம் கணிசமான அளவில் குறைக்கும்.
இத்திட்டம் பயணிகள், சரக்குகளின் விரைவான, பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்யும் என்றும், பயணத் திறனை மேம்படுத்தி பிராந்திய போக்குவரத்துக்கான இணைப்பை வலுப்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது மணிக்கு 100 கி.மீ வேகத்தில் செல்லும் வகையிலும், சராசரி வேகம் மணிக்கு 80 கி.மீ இருக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
திவாஹர்
